கோடீஸ்வரர் உட்பட 11 இளவரசர்கள் கைது – சவூதி பட்டத்து இளவரசர் அதிரடி..!!


மன்னராட்சி நடைபெற்று வரும் சவூதி அரேபியாவில் மந்திரிகள் உள்பட பல முக்கிய பொறுப்புகளை அரச குடும்பத்தினரே வகித்து வந்தனர். மன்னர் சல்மானின் மகனான முகம்மது பின் சல்மான் பட்டத்து இளவரசராக பொறுப்பேற்றதும் சில அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

உலக அரங்கில் சவூதி அரேபியாவின் மீது உள்ள பழமைவாத கருத்துக்களை மாற்றும் வகையில் சில முக்கிய நடவடிக்கைகளை பட்டத்து இளவரசர் எடுத்தார். அரச குடும்பத்தினரே ஊழலில் ஈடுபட்டாலும் கடும் தண்டனை இருக்கிறது என அவர் அறிவித்தார்.


இந்நிலையில், பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் தலைமையில் ஊழல் தடுப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளதாக மன்னர் அறிவித்தார்.

இதை அடுத்த சில மணி நேரங்களிலேயே உலக முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான அல்வாலித் பின் தலால் உள்ளிட்ட 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டதாக சவூதி அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. கோடீஸ்வரரான அல்வாலித் கைது செய்யப்பட்டது அரசியல் அரங்கில் மட்டுமல்லாமல் பொருளாதார உலகிலும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்ட மற்ற இளவரசர்களில் பலர் முக்கிய துறைகளை வகிக்கும் மந்திரிகளாக இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!