பெற்ற தாயை உயிரோடு எரித்து கொல்ல முயன்ற மகள்.. அதிர வைத்த காரணம்..!!


காதல் ராஜபாளையம் வேட்டைபெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி(வயது45). இவரது கணவர் சுந்தரமகாலிங்கம் 15 வருடங்களுக்கு முன்பு மனைவியை பிரிந்து அருப்புக்கோட்டைக்கு சென்று விட்டார். அங்கு வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறார். பாக்கியலட்சுமி தனது மகள் கற்பகஜோதியுடன்(21) வசித்து வருகிறார். டிப்ளமோ படித்து முடித்த கற்பகஜோதி அந்தப்பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் நூற்பாலையில் வேலை செய்யும் ஒருவருடன் கற்பகஜோதிக்கு காதல் மலர்ந்துள்ளது. இது தாயார் பாக்கியலட்சுமிக்கு தெரியவந்ததும் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மகளை கண்டித்துள்ளார். ஆனால் காதலை கைவிட கற்பகஜோதி மறுத்து தாயுடன் அடிக்கடி வாக்குவாதம் செய்து வந்துள்ளார்.
நேற்று முன்தினமும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போதும் பாக்கியலட்சுமி காதலுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார். ஆனால் காதலில் உறுதியாக இருந்த கற்பகஜோதி அதற்கு இடையூறாக இருக்கும் தாயாரை கொலை செய்ய துணிந்தார்.

வீட்டில் இருந்த மண் எண்ணெய்யை எடுத்து தாயாரின் மீது ஊற்றி தீவைத்து விட்டார். உடல் கருகிய பாக்கியலட்சுமி கூச்சல் எழுப்பினார். அக்கம்பக்கத்தினர் தீயை அணைத்து அவரை ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் அவர் சிவகாசியில் உள்ள தீக்காய தடுப்பு பிரிவு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!