இப்படியும் ஒரு காதல் ஜோடியா..? சைக்கிளில் 10 நாடுகளை கடந்து வந்த இத்தாலி ஜோடி.!


இத்தாலி நாட்டைச் சேர்ந்த வனத்துறை அதிகாரி லெஸ்ஸன்ட்ரோ (31). அவரது மனைவி செபானியா(30) ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் டேண்டம் சைக்கிள் எனப்படும், இரட்டை மிதிப்பான்கள் கொண்ட சைக்கிளில் சாகசப் பயணத்தைத் தொடங்கியுள்ளனர்.

முதலில் இத்தாலி நாட்டில் பயணத்தைத் தொடங்கி, குரோஷியா, கிரீஸ், துருக்கி, ஈரான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை கடந்து தற்போது இந்தியா வந்தடைந்துள்ளனர். சீனாவில் இருந்து கப்பல் மூலமாக இந்தியா வந்துள்ளனர்.

கொச்சி வந்து சேர்ந்த அவர்கள், அங்குள்ள மூணாருக்கு சென்றுள்ளனர். பின்னர் அங்கிருந்து மதுரை, ராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடி வந்தனர். இந்த சாகச ஜோடி தங்கள் பயணத்தில் 10 நாடுகளின் 40,000 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சுமார் 100 முதல் 130 கிலோமீட்டர் தூரம் பயணித்துள்ளனர்.

ராமேஸ்வரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள், தங்களுடைய பயணத்தில் இந்தியாவின் கலாச்சாரம், விருந்தோம்பல் மிகவும் சிறப்பானது என அறிந்து கொண்டோம். இங்கு மக்களின் ஒற்றுமை ஆச்சரியப்பட வைக்கிறது. செல்லும் இடமெங்கும் அற்புதமான உபசரிப்புகள் கிடைக்கிறது. இந்திய உணவுகளில் இட்லி, சமோசா மிகவும் பிடித்தவை. ரெயில் பாதையும், சாலையும் இணையாகச் செல்லும் பாம்பன் பாலம் பார்ப்பதற்கு மிகவும் சிறப்பானது.

சைக்கிளை பயணத்திற்கு தேர்வு செய்ததற்கு இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று மலிவான போக்குவரத்து. மற்றொரு ஆரோக்கியமான செயல்பாடு. சைக்கிளிங் தான் எங்கள் உடல் நலத்திற்கு காரணம், என கூறினர். தங்கள் பயணத்தை இத்தாலியில் 2020ல் முடித்துக் கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!