கானா நாட்டைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர், கணினி இல்லாத நிலையில் கரும்பலகையில் கணினித்திரையில் தெரியக்கூடிய காட்சியை ஓவியமாக வரைந்து மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்கிறார்.
33 வயதான ரிச்சர்ட் அகோட்டோ எனும் ஆசிரியர் ஆபிரிக்க நாடான கானாவிலுள்ள பாடசாலையொன்றில் ஆசிரியராக பணியாற்றுகிறார்.
அவரிடம் கணினி வசதி இல்லாத நிலையில், கணினி மென்பொருட்கள் குறித்து அம்மென்பொருட்கள் கணினியில் செயற்படும்போது கணினித் திரையில் தோன்றக்கூடிய காட்சியை கரும்பலகையில் ஓவியமாக வரைந்து கற்பிக்கிறார் ரிச்சர்ட் அகோட்டோ.
அண்மையில் மைக்ரோசொவ்ட் வேர்ட் பாடத்தை தெளிவான ஓவியமாக வரைந்து தான் கற்பித்த போது பிடிக்கப்பட்ட படங்களை பேஸ்புக்கில் அவர் வெளியிட்டிருந்தார்.
பேஸ்புக்கில் ஒவ்ருவா க்வாட்வோ எனும் பெயரில் செயற்படும் ரிச்சர்ட் அகோட்டோ ‘எந்த நேரத்திலும் வகுப்பறையில் நான் இதைச் செய்கிறேன். எனது மாணவர்களை நான் நேசிக்கிறேன். எனவே அவர்களுக்கு விளங்கும் வகையில் நான் கற்பிக்க வேண்டும். கானாவில் தகவல் தொழில்நுட்பம் கற்பிப்பது சற்று வேடிக்கையானது’ எனத் தெரிவித்திருந்தார்.
மேற்படி புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவின. இறுதியில், மைக்ரோசொவ்ட் நிறுவனத்தின் ஆபிரிக்கப் பிரிவுக்கும் இவ்விடயம் தெரியவந்தது. ரிச்சர்ட்டின் பாடசாலைக்கு 2011 ஆம் ஆண்டின் பின்னர் புதிய கணினி எதுவும் கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில். ரிச்சர்ட் அகோட்டோவின் வகுப்பறைக்குப் புதிய கணினியொன்றை வழங்க மைக்ரோசொவ்ட் நிறுவனம் முன்வந்துள்ளதுடன் கல்வி உபகரணங்களை வழங்கவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளது.-Source: metronews
* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!