தாத்தா-பாட்டிக்கு கோவில் கட்டி சிலை வைத்து வழிபட்ட பேரன்கள்!

நாமக்கல் மாவட்டம் அத்திமரத்து குட்டை பகுதியை சேர்ந்தவர் அய்யமுத்து. இவரது மனைவி அய்யம்மாள். அய்யமுத்து ராமாயிபட்டியில் உள்ள இருசாயி கோவில் பூசாரியாக பல ஆண்டுகள் இருந்து வந்து மக்களுக்கு அருள்வாக்கு சொல்லி வந்தார்.

இந்தநிலையில் அய்யமுத்து கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதமும், அவரது மனைவி அய்யம்மாள் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும் இறந்தனர்.

அய்யமுத்து உயிருடன் இருக்கும்போதே தான் இறந்த பிறகு தனக்கு சொந்தமான நிலத்தில் தன்னை அடக்கம் செய்ய வேண்டும் என கூறி வந்ததாக தெரிகிறது.

ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக அப்பகுதியில் உள்ள இடுகாட்டில் அய்யமுத்துவை அடக்கம் செய்தனர்.

இந்தநிலையில் தாத்தாவின் ஆசையை நிறைவேற்ற அவரது பேரன்கள், பூசாரி அய்யமுத்து உயிருடன் இருக்கும்போது எங்கு அடக்கம் செய்ய வேண்டும் என்று கூறினாரோ, அதே இடத்தில் அவருக்கு கோவில் கட்டி உள்ளனர்.

மேலும் அய்யமுத்து, அவரது மனைவி அய்யம்மாளுக்கு முழு உருவச்சிலை வைத்தனர். அய்யமுத்துவின் முதலாம் ஆண்டு நினைவு நாளான நேற்று முன்தினம் அவர்களது சிலைகளுக்கு மாலைகள் அணிவித்து பூஜைகள் செய்து வழிபட்டனர்.

தாத்தா-பாட்டிக்கு சிலை வைத்து வழிபட்ட பேரன்கள், பேத்திகள், உறவினர்களின் செயல் அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே நெகழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!