கொலை திரைவிமர்சனம்!

மர்மமான முறையில் இறந்த மாடல் அழகியின் கொலை எவ்வாறு நடந்தது என்பதை கண்டுபிடிப்பது குறித்த கதை.

பூட்டிய வீட்டிற்குள் பாடகி மற்றும் மாடல் அழகியான மீனாட்சி சவுத்ரி கொலை செய்யப்படுகிறார். கொலையாளியை கண்டுபிடிக்க ஐ.பி.எஸ். அதிகாரியாக ரித்திகாசிங் நியமிக்கப்படுகிறார்.

அவருக்கு துணையாக பணியில் இருந்து ஒதுங்கியிருந்த விஜய் ஆண்டனி துப்பறியும் அதிகாரியாக சேர்கிறார். கொலையுண்ட மீனாட்சி சவுத்ரிக்கு நெருக்கமான சித்தார்த் சங்கர், மாடலிங் புகைப்பட கலைஞர் அர்ஜூன் சிதம்பரம், மாடல் ஏஜெண்ட் முரளி சர்மா, கிஷோர் குமார் ஆகியோரை நோக்கி விஜய் ஆண்டனி, ரித்திகா சிங்கின் விசாரணை பாய்கிறது.

இறுதியில் இவர்களில் யார் கொலை செய்தார்கள்? கொலையாளியை கண்டுபிடித்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை. நாயகனாக நடித்திருக்கும் விஜய் ஆண்டனி, தோற்றத்தில் மாறுபட்டு அதற்கேற்ப விசாரணையில் ஈடுபடும் காட்சிகள் சிறப்பாக உள்ளது.

அதோடு விபத்தில் சிக்கி உயிருக்கு போராடும் தனது மகளுக்கு அப்பாவாகவும், சண்டையிட்டு கொண்டிருக்கும் மனைவிக்கு கணவனாகவும் அவர் தோன்றும் காட்சிகளில் கைதட்ட வைக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ரித்திகா சிங், கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார்.

மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய இயக்குனர் பாலாஜி குமார் அதே தரத்தில் கொலையையும், துப்பறியும் காட்சிகளையும் வடிவமைத்துள்ளார்.

ஆனால், கதை மற்றும் திரைக்கதையில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருந்திருக்கலாம். கொலை குற்றவாளியை தேடுதல் படலம் தான் கதை என்றாலும், அதை சற்று சுவாரஸ்யமான பயணத்தோடு திரைக்கதையை நகர்த்தி இருந்தால் ரசித்து இருக்கலாம்.

மாடலிங் துறையையும், கொலை சம்பவங்களையும் காட்சிகளாக்கிய விதம் ஒளிப்பதிவாளர் சிவக்குமார் விஜயனை பாராட்ட வைக்கிறது. கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. மொத்தத்தில் கொலை – சுவாரஸ்யம் குறைவு.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!