அரசு ஆஸ்பத்திரியில் பர்தா அணிந்து பெண் டாக்டர் போல சுற்றித்திரிந்தவர் கைது!

நாக்பூரில் உள்ள இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரியின் வளாகத்தில் பர்தா அணிந்து பெண் டாக்டர் போல சுற்றித்திரிந்த ஆண் கைது செய்யப்பட்டார்.

நாக்பூரில் உள்ள இந்திராகாந்தி அரசு ஆஸ்பத்திரியின் வளாகத்தில் பர்தா அணிந்த ஒருவர் கடந்த 3 வாரங்களாக சுற்றித்திரிந்து வந்தார். மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பணியாளர்களிடம் தன்னை டாக்டர் ஆயிஷா என்று அறிமுகப்படுத்திக்கொண்டார்.

நோயாளிகளிடமும் அவர் நன்கு பேசி வந்ததார். எனவே அவரின் நடவடிக்கையில் யாருக்கும் சந்தேகம் ஏற்படவில்லை. அவரை டாக்டர் என்றே அனைவரும் கருதினர்.

ஆனால் ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த மராட்டிய பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு அவரது நடவடிக்கை சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே அவர் டாக்டர் தானா என்பதை கண்டறிய அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதன்பேரில் போலீசார் சம்பவத்தன்று ஆஸ்பத்திரிக்கு வந்த டாக்டரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் டாக்டர் இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவருடைய பர்தாவை அகற்றி முகத்தை பார்த்தபோது தான் அது பெண்ணே இல்லை ஆண் என்ற அதிர்ச்சி தகவல் வெளிச்சத்துக்கு வந்தது.

அவர் குரல் கூட பெண்ணை போல இருந்ததால் போலீசாரும் குழம்பிவிட்டனர்.

விசாரணையின்போது அவர் கொடுத்த வாக்குமூலத்தில் பிடிபட்டவர் தான் ஒரு ஓரினச்சேர்க்கையாளர், ஆண்களுடன் நட்பு கொள்வதற்காக பெண்ணாக வேடமிட்டதாக தெரிவித்தார்.

திருமணமான அவரை மனைவி பிரிந்து சென்றுவிட்டார் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் அவர் மீது ஏமாற்றுதல், ஆள்மாறாட்டம் செய்தல் மற்றும் பிற தொடர்புடைய குற்றங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!