5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது சென்னை சூப்பர் கிங்ஸ்!

கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் இறுதிப்போட்டி இன்று குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது.

குஜராத் டைட்டன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடந்தன. டாஸ் வென்ற டோனி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது.

170 – 180 ரன்கள் எடுத்தாலே போதுமானது என்ற நிலையில், டோனியின் பந்துவீச்சு தேர்வு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. தொடக்க வீரர்களாக சகாவும், ஷுப்மன் கில்லும் களமிறங்கினார்கள். ஷுப்மன் கில்லை விரைவாக வீழ்த்தினால் எப்படியும் 170 ரன்னுக்குள் சுருட்டிவிட முடியும் என டோனி எண்ணினார்.அதன்படி பீல்டிங் வியூகம் அமைத்தார்.

ஷுப்மன் கில் 3 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தீபக் சாகர் கேட்சை தவறவிட்டதால் கண்டத்தில் இருந்து தப்பினார். அதன்பின் தொடர்ந்து அதிரடி காட்டினார்.

பந்துகளை பவுண்டரிகளாக விளாசி பந்துவீச்சாளர்களை திணறடித்தார். 19 பந்துகளில் 7 பவுண்டரி உள்பட 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 20வது பந்தில் ஆட்டமிழந்தார். ஜடேஜா வீசிய பந்தை ஷுப்மன் கில் இறங்கி விளையாட முன்றபோது, பந்து நேராக டோனி கிடைக்க, அவர் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து வீழ்த்தினார்.

இதனால் ஷுப்மான் கில் 20 பந்தில் 39 ரன்களுடன் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து விர்திமான் சகா- சாய் சுதர்சன் ஜோடியும் சிஎஸ்கே பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது. இருவரும் அரை சதம் கடந்து முன்னேறினர்.

சகா 54 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, சாய் சுதர்சனுடன் இணைந்தார். தொடர்ந்து அதிரடி காட்டிய சாய் சுதர்சன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 96 ரன்களில் அவுட் ஆனார். அவர் 47 பந்துகளில் 8 பவுண்டரி, 6 சிக்சர்களுடன் இந்த இலக்கை எட்டினார்.

20 ஓவர் முடிவில் குஜராத் அணி 4 விக்கெட் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது. ஹர்திக் பாண்ட்யா 21 ரன்களுடன் களத்தில் இருந்தார். சிஎஸ்கே தரப்பில் பதீரனா 2 விக்கெட் எடுத்தார். தீபக் சாகர், ரவீந்திர ஜடேஜா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 215 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் கான்வே களமிறங்கினர். ருதுராஜ் 3 பந்துகளில் 4 ரன்கள் எடுத்தநிலையில், அங்கு மழை திடீரென குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

சிஎஸ்கே பேட்டிங் செய்ய தொடங்கிய நிலையில், இறுதிப்போட்டி முழுமையாக முடியுமா அல்லது போட்டி ரத்து செய்யப்படுமா என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர். பின்னர், மழை நின்றதை அடுத்து ஈரப்பதமான மைதானத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர்.

சரியாக நள்ளிரவு 12.10 மணியளவில் சிஎஸ்கே பேட்டிங் செய்ய தொடங்கியது. ஆனால், பவர் பிளே ஆப் முறைப்படி சிஎஸ்கேவுக்கு 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. குஜராத் அணி 20 ஓவர்களில் 214 ரன்கள் அடித்த நிலையில், சென்னை அணிக்கு 15 ஓவர்களுக்கு 171 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

முதலில் களமிறங்கிய ருதுராஜ் 26 ரன்களும், கான்வே 47 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து, ரஹானே 27 ரன்களும், ராயுடு 19 ரன்களும் எடுத்தனர். ராயுடு ஆட்டமிழந்ததை அடுத்து, டோனி களமிறங்கினார்.

12.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோனி ரன் எடுக்காமல் அவுட்டானார். இது சென்னை ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமாக இருந்தது. தொடர்ந்து, துபே மற்றும் ஜடேஜா களத்தில் இருந்தனர்.

12 பந்துகளில் 21 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. துபே 32 ரன்களும், ஜடேஜா 15 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்நிலையில், 15 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்து சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் ஐபிஎல் 2023 தொடரில் 5வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன் பட்டத்தை வென்றது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!