காணாமல் போன மூதாட்டி… கடவுளாக வழிபட்ட மக்கள்!

மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள நர்மதாபுரத்தை சேர்ந்த மூதாட்டி ஜோதி ரகுவன்ஷி. இவர் ஜபல்பூரில் உள்ள நர்மதா ஆற்றில் நடந்து செல்வது போல வீடியோக்கள் சமூகவலைத்தளங்களில் வைரலானது.

இதனை வைரலாக்கிய நெட்டிசன்கள் ஆற்றில் தெய்வீக உருவம் காணப்படுவதாக தகவல் பரப்பினர். இதனால் ஆற்றங்கரையில் ஏராளமான மக்கள் திரண்டதால் அங்கு கூட்டம் அலைமோதியது.

சிறிது நேரத்தில் ஆற்றில் இருந்து ஜோதிரகுவன்ஷி வெளியே வந்தார். அப்போது அவரை கடவுளாக (நர்மதா தாய்) வழிபட தொடங்கினர். இதனால் அங்கு போலீசாரும் விரைந்து சென்றனர்.

போலீசார் ஜோதி ரகுவன்ஷியிடம் விசாரித்த போது அவர் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறியவர் என்பது தெரியவந்தது. மேலும் வேண்டுதலுக்காக நர்மதா ஆற்றை சுற்றி வலம் வந்துள்ளார். ஆற்றங்கரையோரமாக அவர் நடந்து சென்ற போது சில இடங்களில் தண்ணீர் குறைவாக இருந்துள்ளது.

இதனால் அவர் ஆற்றில் இறங்கி நடந்து சென்றுள்ளார். சில இடங்களில் நீந்தி சென்றுள்ளார். ஆற்றங்கரைகளில் தேவைப்படுவோருக்கு நாட்டு மருந்துகள் சிலவற்றை வழங்கியுள்ளார். இதனை ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அது வைரலானதால் மக்கள் திரண்டதும் தெரியவந்தது. ஆனால் மூதாட்டி ஜோதிரகுவன்ஷி கூறுகையில் நான் தண்ணீர் மேல் நடக்கவில்லை. நான் பெண் தெய்வமும் அல்ல. வேண்டுதலுக்காக ஆற்றை சுற்றி வருகிறேன் என்றார்.

இதையடுத்து நர்மதாபுரத்தில் உள்ள ஜோதிரகுவன்ஷி உறவினர்களை போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அவர்கள் வந்ததும் அவர்களுடன் ஜோதிரகுவன்ஷியை அனுப்பி வைத்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!