கருமுட்டையை சேகரித்து உறைய வைக்கும் பெண்கள்!

கருமுட்டைகளை உறையச் செய்கிற இந்தச் செயல்முறையை ஆங்கிலத்தில் Oocyte cryopreservation அல்லது Egg freezing என்கிறோம். 1986ல் இந்த செயல்முறையில் பிறந்த முதல் குழந்தையை அடுத்து, இந்தத் துறையில் பெரிய முன்னேற்றங்களைப் பார்க்க முடிகிறது.

குறைவான வெற்றி வாய்ப்பும், கருமுட்டைகளுக்கு ஏற்படுகிற சேதமும்தான் பெரிய பிரச்னைகளாக ஆரம்ப காலத்தில் இருந்தன. அல்ட்ரா ராபிட் ஃப்ரீசிங் (Ultra rapid freezing) மற்றும் இக்ஸி (ICSI) போன்ற தொழில்நுட்ப முன்னேற்றங்களின் விளைவால், கருமுட்டைகளை வெற்றிகரமாக உறையச் செய்கிற வாய்ப்பு 90 சதவிகிதமாகவும், அந்த முட்டைகள் கருவாகும் வெற்றி வாய்ப்பு 45 சதவிகிதமாகவும் உயர்ந்திருக்கிறது.


இந்த செயல்முறையானது, ஆரம்ப காலத்தில், புற்றுநோய் உள்ள பெண்களுக்கும், குடும்பப் பின்னணியில் தாய்வழியில் யாருக்கேனும் புற்றுநோய் இருப்பவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டது. இனப்பெருக்க வயதில் உள்ள பெண்களில் பலர் இன்று புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். புற்றுநோய்க்கான சிகிச்சைகளில் கீமோதெரபியும், ரேடியேஷனும் தவிர்க்க முடியாதவை.

இதனால் அவர்களின் சினைப்பையில் உள்ள கருமுட்டைகள் அழிந்து போகும் அபாயம் அதிகம். தவிர, இயற்கையாக கருமுட்டை உருவாவதிலும் அவர்களுக்கு சிரமம் இருக்கும். புற்றுநோய் உறுதி செய்யப்பட்டதுமே அவர்களது கருமுட்டைகளை சேகரித்து, பத்திரப்படுத்தி வைக்கலாம்.

புற்றுநோய் சிகிச்சை முடிந்ததும், சேகரித்து வைத்துள்ள கருமுட்டைகளைப் பயன்படுத்தி, குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த தொழில்நுட்பம் தெரிந்ததும், பொது வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் பெண்களும், பிரபலங்களும்கூட இம்முறையில் குழந்தைப் பிறப்பைத் தள்ளிப் போட ஆரம்பித்தனர்.

இன்றைய காலகட்டத்தில் வேலை, லட்சியத்தை அடைகிற ஓட்டம் போன்ற காரணங்களால் பெண்கள், 30 முதல் 40 வயது வரை குழந்தை பெற்றுக் கொள்வதைத் தள்ளிப் போட நினைக்கிறார்கள். கருமுட்டையை உறையச் செய்கிற செயல்முறையின் மூலம் இத்தகைய பெண்கள், தங்களது உயிரியல் கடிகாரத்தையே தம் கட்டுக்குள் வைத்திருக்க முடிகிறது.

ஒவ்வொரு பெண்ணும் வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் கருமுட்டைகளுடன்தான் பிறப்பாள். அவளது 30 வயதில் அந்த முட்டைகளில் 80 சதவிகிதம் குறைந்திருக்கும். 40 வயதில் அவளிடம் வெறும் 3 சதவிகித முட்டை இருப்புதான் மிஞ்சும்.

கருத்தரிக்கிற வாய்ப்பானது ஒவ்வொரு மாதமும் சிறுகச் சிறுக குறைந்து கொண்டே வருவதுடன், 35 வயதுக்குப் பிறகு கருமுட்டைகளின் தரமும் குறையத் தொடங்கும். இதன் விளைவால் தாமதமாகக் குழந்தை உண்டாகும்போது, கருக்கலையவும் டவுன் சிண்ட்ரோம் மாதிரியான மரபணுக் கோளாறுகளுடன் குழந்தை பிறக்கவும் வாய்ப்புகள் அதிகம்.

கருமுட்டையை உறையச் செய்ய, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு அதிகளவில் ஹார்மோன் ஊசிகள் போடப்பட்டு, முட்டை உற்பத்தியானது தூண்டப்படும். அந்தப் பெண்ணை மருத்துவமனையில் அட்மிட் செய்து, மயக்க மருந்து கொடுத்து, உருவான அந்த முட்டைகள் சேகரிக்கப்படும்.

அந்த முட்டைகள் எதிர்காலத் தேவைக்காக நைட்ரஜன் திரவக் கலவையில் உறைய வைக்கப்படும். இந்த மொத்த செயல்களுக்கும் 2 முதல் 3 லட்ச ரூபாயும், முட்டைகளை உறையச் செய்ய வருடத்துக்கு 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் ரூபாயும் செலவாகும். கருமுட்டைகளை உறையச் செய்கிற சிகிச்சையில் உண்டாகிற பாதகங்களை சம்பந்தப்பட்ட பெண்கள் உணர வேண்டும்.

அதிகளவிலான ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுவதன் விளைவாக அவர்களது சினைப்பை தற்காலிகமாக வீங்கி, வலியுடன் காணப்படும். ஓ.ஹெச்.எஸ்.எஸ் (Ovarian hyperstimulation syndrome) எனப்படுகிற பாதிப்பும் வரலாம்.

தற்கால நிர்ப்பந்தங்களுக்காக குழந்தைப் பேற்றைத் தள்ளிப் போட நினைத்து, கருமுட்டையை உறையச் செய்யத் துணிந்தாலும், குழந்தை வேண்டும் என நினைக்கிறபோது, இவர்களுக்கு இயற்கையான கருத்தரிப்பு சாத்தியமாகாது.

ஏ.ஆர்.டி ( ART) எனப்படுகிற செயற்கை கருத்தரிப்பு முறையைத்தான் நாட வேண்டும். வயதான பிறகு கருத்தரிக்கும் பெண்களுக்கு, அந்த வயதுக்கே உரித்தான நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளையும் தவிர்க்க முடியாது.

சேகரிக்கப்பட்ட முட்டைகள் வேண்டுமானால் இளமையுடன் இருக்கலாம். ஆனால், சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவரின் அணுக்களின் கூடுதல் வயது காரணமாக, பிறக்கும் குழந்தை ஆட்டிசம் மற்றும் சில மனநலக் கோளாறுகளுடன் பிறக்க வழி வகுக்கலாம்.

இவையெல்லாம் போக, தாமதமாகக் குழந்தை பெறுகிற பெண்கள் சந்திக்கிற தலைமுறை இடைவெளிப் பிரச்னையையும் இவர்கள் சந்தித்தாக வேண்டும். பெரும்பாலும் இந்தப் பெண்கள் ஒரே குழந்தையுடன் நிறுத்திக் கொள்வார்கள். ஒற்றைக் குழந்தையாக வளரும் பிள்ளைகள் சந்திக்கிற உளவியல் பிரச்னைகள் எல்லோரும் அறிந்ததே.

அம்மா மாதிரி காட்சியளிக்க வேண்டிய பெண், பெற்ற குழந்தைக்கு பாட்டி மாதிரித் தோற்றமளிப்பது இவை எல்லாவற்றையும் விடப் பெரிய கொடுமை. கருமுட்டை உறைதல் தொழில்நுட்பம் மூலம் தாமதமாக குழந்தை பெறுவதில் சில பாதகங்களும் உண்டு.வயதான அம்மாக்கள் வேலையில் கட்டளையிடுகிற பொறுப்பான பதவிகளையும் அதற்கேற்ற ஊதியத்தையும் கேட்டுப் பெற முடியும்.

உயர்ந்த பதவியில் இருப்பதால் சிறந்த மருத்துவப் பராமரிப்பைப் பெறக் கூடும். இளவயது அம்மாக்களைவிட, 40 வயதில் குழந்தை பெறுகிற பெண்கள் நீண்ட காலம் வாழ்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வயதான பெண்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் வாய்மொழித் திறமை மற்றும் அறிவுசார் விஷயங்களில் அதிக புத்திசாலிகளாக இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குழந்தைப் பேற்றைத் தள்ளிப்போட சில நிறுவனங்கள் அறிவித்துள்ள இந்தச் சலுகைகள், பொருளாதார ரீதியாக பெண்களுக்குப் பெரிய அளவில் உதவியாக இருக்கும். தாய்மை என்கிற விஷயத்துக்காக திறமையான பெண்கள் வேலையை விட்டுச் செல்வதாக நினைக்கிற நிறுவனங்களுக்கு, தாய்மைப் பேற்றைத் தள்ளிப் போடச் செய்கிற இந்த விஞ்ஞானம் நிச்சயம் சரியான தீர்வு அல்ல.

ஆனாலும், இந்தத் தீர்வை நிறுவனங்கள், தமது பெண் ஊழியர்களுக்கு ஒரு வாய்ப்பாக அறிவிக்கலாமே தவிர கட்டாயமாக்கக் கூடாது. நிதி உதவி அறிவிப்புகள், சம்பந்தப்பட்ட பெண்ணை விருப்பத்துக்கு மீறி இந்த விஷயத்தில் முடிவெடுக்கத் தூண்டலாம்.

பெண்ணின் திறமையின் மேல் நம்பிக்கை வைத்திருக்கிற நிறுவனங்கள், குழந்தைப் பேற்றைக் காரணம் காட்டி அதைத் தள்ளிப் போடச் செய்வதற்குப் பதில், அவளது வேலை நேரத்தை வசதியாக மாற்றிக் கொடுக்கலாம். இந்த வயதில்தான் குழந்தை பெற வேண்டும் என்ற கட்டுப்பெட்டித்தனமான, எழுதப்படாத சட்டங்களுக்குள் சிக்காமல், தனக்கு விருப்பமான, தனக்கு சரியெனப்படுகிறபோது குழந்தை பெற்றுக் கொள்ள நினைக்கிற படித்த, பொறுப்பான பெண்களுக்கு இந்தச் சலுகையும், தொழில்நுட்பமும் நிச்சயம் மகிழ்ச்சியளிக்கும்.

தன் குடும்ப, சமுதாய சூழல்களுக்கேற்ப, கருவைச் சுமப்பதா, தள்ளிப் போடுவதா என்பதை முடிவு செய்வதும், அதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதும், தன் மீது சுமத்தப்படுகிற சுமைகளுக்கு பலியாகாமல் தன்னைக் காத்துக் கொள்வதும் ஒவ்வொரு பெண்ணின் தனிப்பட்ட விருப்பமும் உரிமையும்… பொறுப்பான மருத்துவராகவும், மனுஷியாகவும் சொல்கிறார் லட்சுமி.

குழந்தைப் பேறு என்பது அதைச் சுமக்கப் போகிற பெண்ணின் உரிமை. அதில் தலையிட கணவனுக்குக் கூட உரிமையில்லை என வாதம் செய்கிற பெண்கள், கார்ப்பரேட் நிறுவனங்களின் சூழ்ச்சிக்கு விலை போகலாமா? மருத்துவ நிறுவனங்களின் சூழ்ச்சி கருமுட்டைகளை உறைய வைத்துப் பாதுகாக்கிற நிறுவனங்களின் மாபெரும் சூழ்ச்சியும் இதன் பின்னணியில் பெரும் பங்கை வகிப்பது தெரிகிறது.

ஒருமுறை கருமுட்டை உறைவுக்கு கிட்டத்தட்ட 3 லட்சம்… பிறகு வருட வாடகை… மருந்துகளுக்கான செலவு… ஹார்மோன் ஊசிகளின் தாக்கம் ஏற்படுத்திய பிரச்னைகளை சமாளிக்க தனியே மருத்துவச் செலவு… என பட்ஜெட் எங்கேயோ போய் நிற்கும்.

குழந்தை வேண்டும் என விரும்பும் போது, மறுபடி செயற்கை முறை கருத்தரிப்பு, அதற்கான மருத்துவச் செலவுகள்… இத்தனைக்குப் பிறகும் உறைய வைத்த முட்டை உயிர் பெறுமா என்பது மில்லியன் டாலர் கேள்வி!கருத்தரிக்கிற வாய்ப்பானது ஒவ்வொரு மாதமும் சிறுகச் சிறுக குறைந்து கொண்டே வருவதுடன் 35 வயதுக்குப் பிறகு கருமுட்டைகளின் தரமும் குறையத் தொடங்கும்-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!