பெண் கிராம அதிகாரி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலுார் அடுத்துள்ள கந்தம்பாளையம் அருகே உள்ள குன்னமலை சிக்கிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (35). இவர் நாமக்கல் தொட்டிப்பட்டியில் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கும் திருச்செங்கோடு தாலுகா கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்த நவீனா என்ற பெண்ணுக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் மகன் உள்ளார்.

இந்த நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக நவீனா மனமுடைந்த நிலையில் இருந்து வந்ததாகவும், இதனால் வீட்டில் யாரும் இல்லாத போது நவீனா தனது புடவையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், நவீனாவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த நல்லூர் போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் நவீனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே நவீனா தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா என தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!