தந்தையின் இறுதிச்சடங்கு நிகழ்வு பற்றி ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்!

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் ( வயது 85) நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று காலை காலமானார்.

மறைந்த சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் இன்று நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம். இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்ய ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம் என அஜித் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகி உள்ளது.

அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, எங்களது தந்தையார் திரு. பி.எஸ்.மணி(85 வயது) அவர்கள் பல நாட்களாக உடல்நலமின்றி படுக்கையில் இருந்து வந்தார். இன்று அதிகாலை தன்னுடைய தூக்கத்தில் உயிர் நீத்தார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டிருந்த எங்கள் தந்தையை அன்போடும், அக்கரையோடும் கவனித்து வந்தும், எங்கள் குடும்பத்திற்கு உறுதுணையாக இருந்த அனைத்து மருத்துவர்களுக்கும் நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.

எங்கள் தந்தையார் சுமார் அறுபது ஆண்டு காலமாக எங்கள் தாயின் அன்போடும், அற்பணிப்போடும் ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். இந்த துயர நேரத்தில், பலர் எங்கள் தந்தையாரின் இறப்பு செய்தியை பற்றி விசாரிக்கவும், எங்கள் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காகவும் எங்களை தொலைபேசியிலோ, கைபேசியிலோ அழைப்பு விடுத்தோ அல்லது குறுந்தகவல் அனுப்பியோ விசாரித்து வருகின்றனர்.

தற்போதுள்ள சூழலில் எங்களால் உங்கள் அழைப்பை மேற்கொள்வதற்கோ அல்லது பதில் தகவல் அனுப்ப இயலாதமையை நீங்கள் புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம். எங்கள் தந்தையாரின் இறுதி சடங்குகள் ஒரு குடும்ப நிகழ்வாகவே இருக்க கருதுகிறோம்.

எனவே இந்த இறப்பு தகவலை அறிந்த அனைவரும் எங்களுடைய துயரத்தையும், இழப்பையும் புரிந்துகொண்டு, குடும்பத்தினர் துக்கத்தை அனுசரிக்கவும், இறுதி சடங்குகளை தனிபட்ட முறையில் செய்யவும் ஒத்துழைக்கும்படி வேண்டிக்கொள்கிறோம். அனுப் குமார், அஜீத் குமார், அனில்குமார் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!