சிசேரியன் மூலம் குழந்தையை பெற்ற பெண்… ‘செப்டிக் ஷாக்’பாதிப்பால் கை, கால் துண்டிப்பு!

சிசேரியன் மூலம் குழந்தை பெற்ற பெண்ணுக்கு ‘செப்டிக் ஷாக்’நோய் பாதிப்பு ஏற்பட்டதால் அவரது கை மற்றும் கால்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா பச்சேகோ (29) என்ற பெண்ணுக்கு கடந்த சில வாரங்களுக்கு முன், சிசேரியன் மூலம் குழந்தை பிறந்தது. ஏற்கனவே அவருக்கு ஒரு குழந்தை இருக்கும் நிலையில், மற்றொரு குழந்தைக்கும் தாயானார்.

ஆனால் பிரசவம் முடிந்து வீடு திரும்பிய கிறிஸ்டினா பச்சேகோவுக்கு அடுத்த சில நாட்களிலேயே காய்ச்சல், மூச்சுத்திணறல், வாந்தி போன்ற அறிகுறிகள் தென்பட்டன.

அதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், அவருக்கு தொடர்ந்து இரண்டு வாரங்கள் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவரது கை மற்றும் கால்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் மோசமாக பாதிக்கப்பட்டதால், ஆங்காங்கே ரத்த உறைவு ஏற்பட்டது.

அவரது கைகள் மற்றும் கால்கள் கறுப்பாக மாறின. இதுபோன்ற பாதிப்புகள் அவரது உயிருக்கு தீங்கு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் கூறினர். அவரது உயிரை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக, அவரது கைகளையும் கால்களையும் அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் துண்டித்தனர்.

இதுகுறித்து மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், ‘சிசேரியன் அறுவை சிகிச்சையின் காரணமாக கிறிஸ்டினா பச்சேகோவுக்கு ‘செப்டிக் ஷாக்’ ஏற்பட்டதாக தெரிகிறது.

இத்தகைய பிரச்னைகள் பெரும்பாலும் தீவிரமான நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது. அவரது உயிருக்கு ஆபத்தான சூழல் ஏற்படும் என்பதால் அவரது கைகளையும், கால்களையும் துண்டிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளார்’ என்று தெரிவித்தனர்.-News & image Credit: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!