மிரள வைக்கும் தொடர் துப்பாக்கிச்சூடு – அமெரிக்காவில் ஒரே ஆண்டில் 44,000 பேர் பலி!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரருகே மாண்ட்ரே பார்க் நகரம் அமைந்துள்ளது. இதில், கார்வே அவென்யூ பகுதியில் செங் வான் சோய் என்ற சீன வம்சாவளி தொழிலதிபரின் ஓட்டல் ஒன்று உள்ளது.

தெற்கு கலிபோர்னியாவில் ஆண்டுதோறும் 2 நாட்கள் சீனாவின் சந்திர புதுவருட திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் லட்சக்கணக்கானோர் திரளாக கலந்து கொள்வது வழக்கம்.

இதேபோன்று நடந்த முதல் நாள் திருவிழாவின்போது, அந்த ஓட்டலில் சமீபத்தில் சீன புதுவருட தினம் கோலாகலமுடன் கொண்டாடப்பட்டு வந்தது. அதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.

பலர் மேடையில் உற்சாக நடனம் ஆடிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் அதிரடியாக பல ரவுண்டுகள் சுட்டு விட்டு தப்பியோடி விட்டார். இதில் 10 பேர் பலியானார்கள்.

தகவலறிந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஹூ கேன் திரான் (72), என்ற முதியவர் என தெரிய வந்தது.

வேன் ஒன்றில் பதுங்கி இருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்ததும் திரான் துப்பாக்கியால் தன்னை சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில், அமெரிக்காவில் கடந்தாண்டு மட்டும் மொத்தம் 647 துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2022-ம் ஆண்டில் மட்டும் ஒட்டுமொத்த அமெரிக்காவிலும் 44 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர். இது அங்குள்ள தற்கொலை எண்ணிக்கையில் இரு மடங்கானது என்பது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!