போய் ஓரமா நிக்க வேண்டியது தானே… பாக்.தொகுப்பாளினி மீது மோதிய கிரிக்கெட் வீரர்!

டைவ் அடித்து வந்த வீரர் நேராக பாகிஸ்தான் தொகுப்பாளினியின் கால்களிலேயே மோத, அவர் எதிர்பாராத வகையில் கீழே விழுந்துவிட்டார்

இந்தியாவில் நடக்கும் ஐபிஎல் தொடரை போன்றே தென்னாப்பிரிக்காவில் சிஎஸ்ஏ 20 ஓவர் சேலஞ்ச் என்ற பெயரில் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.

ஐபிஎல்-ல் முதலீடு செய்திருப்பவர்களே, இந்த தொடரிலும் அணிகளை வாங்கியுள்ளனர். அதன்படி கடந்த ஜனவரி 18ம் தேதியன்று நடைபெற்ற 12வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் எம்ஐ கேப் டவுன் ஆகிய அணிகள் மோதின.

சன்ரைசர்ஸ் ஈஸ்டர்ன் கேப் அணியின் இன்னிங்சில் மார்கோ யான்சென் அதிரடியாக விளையாடி வந்தார். ஆட்டத்தின் 13வது ஓவரில் சாம் கரண் வீசிய பந்தை அவர் டீப் மிட் விக்கெட்டில் வேகமாக ஓங்கி அடித்தார்.

மிகவும் வேகமாக பவுண்டரியை நோக்கி சென்ற அந்த பந்தை தடுப்பதற்காக இரு புறத்திலும் இருந்து ஓடி வந்த வீரர்கள், டைவ் அடித்து முயற்சி செய்தார்கள்.

ஆனால் அதே நேரத்தில் தான் அங்கு பாகிஸ்தானை சேர்ந்த தொகுப்பாளினி ஜைனப் அப்பாஸ், பிரபலம் ஒருவரிடம் பேட்டி எடுத்து கொண்டு இருந்தார்.

அப்போது டைவ் அடித்து வந்த வீரர் நேராக தொகுப்பாளினியின் கால்களிலேயே மோத, அவர் எதிர்பாராத வகையில் கீழே விழுந்துவிட்டார். இதுகுறித்த வீடியோவை இணையத்தில் பரப்பி வரும் ரசிகர்கள் ஓரமா போய் நிற்க வேண்டியது தானே என கிண்டலடித்து வருகின்றனர்.

அந்த வீடியோவை டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஒளிபரப்பு நிறுவனம், உங்களுக்கு ஒன்னும் ஆகவில்லையே என்று கேட்டது. இதற்கு பதில் கொடுத்துள்ள ஜைனப் அப்பாஸ், நான் எப்படியோ தப்பித்துவிட்டேன் என்று தான் கூற வேண்டும்.

ஆனால் அந்த வலி எனக்குத்தான் தெரியும். அதற்காக நான் ஐஸ் கட்டிகளை வைத்து ஒத்தடம் கொடுத்துக் கொண்டேன் என வேடிக்கையாக கூறியுள்ளார். இதுபுறம் இருக்க, இந்த பரபரப்பான போட்டியில் சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.

முதலில் பேட்டிங் செய்த எம்.ஐ கேப்டவுன் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்களை குவித்தது. இதன்பின்னர் ஆடிய சன்ரைசர்ஸ் அணி 19.3 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 172 ரன்களை குவித்து வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!