கர்ப்பிணிகள் சிசேரியனுக்குத் தயாராவது எப்படி..?

தற்போது இந்தியாவில் சிசேரியன் அறுவை சிகிச்சை அதிகரித்து இருப்பதாகப் பல புள்ளிவிவரங்கள் தெரிவித்துள்ளன. அதற்குப் பல காரணங்கள் உள்ளன.

அநேகமாக சிசேரியன்தான் என்று முடிவு செய்துவிட்டால், சிகிச்சைக்கு 6-8 மணி நேரத்துக்கு முன்பாகவே திட உணவு சாப்பிடக் கூடாது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ரத்த அழுத்தம், நாடித்துடிப்பு, உடலின் வெப்பநிலை போன்ற கர்ப்பிணிக்குத் தேவையான முன் பரிசோதனைகள் செய்யப்படும்;.

எனிமா கொடுப்பது, சிறுநீர் வெளியேற கதீட்டர் சொருகுவது, உடலைச் சுத்தப்படுத்துவது, குளுக்கோஸ் சலைன் ஏற்றுவது போன்ற முன் தயாரிப்புகள் மேற்கொள்ளப்படும்.

குழந்தையின் இதயத் துடிப்பு கண்காணிக்கப்படும். கர்ப்பிணிக்குப் பொருத்தமான ரத்தம் தயாராக வைத்துக் கொள்ளப்படும். பொதுவாக, சிசேரியனுக்கு மூச்சு வழியாகத் தரப்படும் பொதுவான மயக்கம், முதுகில் ஊசி போட்டு பெறப்படும் முதுகுத் தண்டுவட மயக்கம் (ஸ்பைனல் அல்லது எபிடூரல்) ஆகியவை பயன்படுத்தப்படுவது நடைமுறை.

இவற்றில் பொதுவான மயக்கத்தில் கர்ப்பிணி உறங்கிவிடுவார். வலி தெரியாது. மற்ற மயக்கத்தில் கர்ப்பிணிக்கு நினைவு இருக்கும். குழந்தையை வெளியில் எடுப்பதைக் காண முடியும். என்றாலும் வலி தெரியாது. சிசேரியனுக்குப் பின்… சிசேரியன் செய்யப்பட்ட பிறகு 3 – 5 நாட்களுக்கு மருத்துவமனையில் தங்க வேண்டியது இருக்கும்.

இரண்டாம் நாளில் சாப்பிடத் தொடங்கலாம். இரண்டு வாரங்களுக்குப் பிறகு மாடிப்படி ஏறலாம். ஒரு மாதம் கழிந்த பிறகு பல வேலைகளைச் செய்ய முடியும். அதிக எடையுள்ள பொருட்களைத் தூக்குவதை மட்டும் சில மாதங்களுக்குத் தள்ளிப் போட வேண்டும்.

அடுத்த குழந்தைக்கு 2-லிருந்து 4 வருடங்கள் இடைவெளி தேவை. இரண்டாவது குழந்தைக்கான சிசேரியன் என்றால், குழந்தையை எடுத்த கையோடு கருத்தடை அறுவை சிகிச்சை செய்துகொள்வது நல்லது. இல்லாவிட்டால், கருத்தடை அறுவை சிகிச்சைக்காக இன்னொரு முறை வயிற்றைக் கிழிக்க வேண்டியது வரும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!