கனடா ராப் பாடகருக்கு 13 ஆண்டு சிறை தண்டனை!

கனடா மற்றும் சீனா இடையிலான உறவு சமீபகாலமாக மோசமடைந்து வருகிறது. பல்வேறு விவகாரங்களில் இருநாடுகளுக்கு இடையே மோதல் நீடிக்கிறது.

இதன் காரணமாக சீனாவில் கனடா நாட்டை சேர்ந்தவர்களும், கனடாவில் சீனர்களும் குற்றவழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்படுவது தொடர் கதையாகி உள்ளது.

இந்த நிலையில் சீனாவில் கனடாவை சேர்ந்த பிரபல ராப் பாடகருக்கு கற்பழிப்பு வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கிரிஸ் வூ என்கிற 32 வயதான ராப் பாடகர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் 17 வயது சிறுமியை கற்பழித்ததாக கைது செய்யப்பட்டார். தலைநகர் பீஜிங்கில் உள்ள சாயோயாங் மாவட்ட கோர்ட்டு இந்த வழக்கை விசாரித்து வந்தது.

நேற்று இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு வந்தபோது, கிரிஸ் வூ மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்தார்.

தொடர்ந்து இந்த வழக்கில் கிரிஸ் வூக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த விவகாரம் குறித்து கனடா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!