உலக கோப்பையில் தேசிய கீதம் பாடாமல் நின்ற ஈரான் வீரர்கள்!

ஈரானில் ஹிஜாப் உடைக்கு எதிராக நாடு முழுவதும் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த செப்டம்பர் 17-ம் தேதி மாஷா அமினி (22), என்ற இளம்பெண் இறந்த பிறகு போராட்டம் வலுவடைந்துள்ளது.

பல்வேறு நகரங்களில் நடந்து வரும் போராட்டங்களால் அந்நாடு திக்குமுக்காடி வருகிறது. போலீசார், போராட்டக்காரர்கள் இடையே நடந்த மோதலில் இதுவரை 300-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.

போராட்டம் நாட்டின் பல நகரங்களுக்கு பரவி வருகிறது. ஹிஜாப் எதிர்ப்பு போராட்டக்காரர்களை ஒடுக்க ஈரான் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியும், தடியடி, கண்ணீர் புகைகுண்டு வீசியும், கைது நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், 2022 உலக கோப்பை கால்பந்து தொடர் கத்தார் நாட்டில் நடைபெற்று வருகிறது. கால்பந்து தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஈரான், இங்கிலாந்து அணிகள் மோதின.

போட்டி தொடங்கும் முன் இரு நாடுகளின் தேசிய கீதங்களும் இசைக்கப்பட்டது. அதில், ஈரான் நாட்டின் தேசிய கீதம் இசைக்கப்பட்ட போது அந்நாட்டின் வீரர்கள் யாரும் தேசிய கீதத்தை பாடவில்லை. ஈரான் வீரர்கள் அனைவரும் தங்கள் வாயை அசைக்காமல் அப்படியே நின்றனர்.

இது தற்போது பேசுபொருளாகி உள்ளது ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் அரசுக்கு எதிராகவும் ஈரானில் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலக கோப்பை போட்டியின்போது ஈரான் கால்பந்து வீரர்கள் தேசிய கீதத்தை பாடாமல் நின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!