பெற்ற மகளை சுட்டுக்கொன்ற தந்தை!

டெல்லி தலைநகரப் பகுதியை ஆக்ரா நகருடன் யமுனா விரைவுச்சாலை இணைக்கிறது. இந்த விரைவுச்சாலையில் மதுரா அருகே ஒரு பெரிய சூட்கேசில் இளம்பெண் ஒருவரின் உடல் காயங்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.

அவர் யார் என்பதை கண்டுபிடிக்க போலீசார் தீவிரமாக களத்தில் இறங்கினர். 14 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொல்லப்பட்டு கிடந்த பெண்ணின் உத்தேச வயதை ஒட்டிய, டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் சமீபத்தில் காணாமல் போன பெண்களின் பட்டியல் திரட்டப்பட்டு விசாரிக்கப்பட்டது.

அதில் அந்தப் பெண், தெற்கு டெல்லி பாதார்பூர் பகுதியைச் சேர்ந்த நிதேஷ் யாதவ்-பிரஜ்பாலா தம்பதியின் மகள் ஆயுஷி யாதவ் (வயது 22) என தெரியவந்தது. அவரது உடலை அடையாளம் காட்ட வரும்படி நிதேஷை போலீசார் அழைத்தனர்.

அப்போது, மகள் காணாமல்போனது குறித்து நிதேஷ் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். அவரிடம் போலீசார் மேலும் துருவித் துருவி விசாரித்தபோது, பெற்ற மகளை தானே துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.

பெற்றோருடன் வசித்த ஆயுஷி, பி.சி.ஏ. மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். சமீபத்தில் சில நாட்கள் வெளியே சென்று தங்கிய அவர் வீடு திரும்பி வந்தபோது, தான் விரும்பிய வேறு சாதியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு விட்டதாக தெரிவித்துள்ளார்.

அதைக் கேட்டு ஆத்திரம் தலைக்கேறிய நிதேஷ், மகளை கண்மண் தெரியாமல் தாக்கியுள்ளார். அதிலும் கோபம் தீராமல், தான் உரிமம் பெற்று வைத்துள்ள கைத்துப்பாக்கியால் அவரை இருமுறை சுட்டுள்ளார்.

அதில் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த மகளின் உடலை ஒரு பிளாஸ்டிக் பேப்பரால் சுற்றி பெரிய சூட்கேசுக்குள் அடைத்து காரில் எடுத்துச் சென்று யமுனா விரைவுச்சாலை ஓரத்தில் வீசிவிட்டு வந்துவிட்டார். அதற்கு அந்தப் பெண்ணின் தாயும் உதவி செய்துள்ளார்.

அந்த பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்தனர். தங்கள் மகள் வேறு சாதி ஆணை திருமணம் செய்ததை ஏற்கமுடியாத பெற்றோர், அவரை ஆணவக் கொலை செய்துள்ளனர் என போலீசார் தெரிவித்தனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!