டுவிட்டரில் 7 நாட்களும் வேலை… ஊழியர்கள் அதிர்ச்சி!

டுவிட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது

உலகின் முன்னணி பணக்காரரான எலான் மஸ்க், பிரபல சமூக ஊடக நிறுவனமான டுவிட்டரை கடந்த வாரம் தன் வசப்படுத்தினார். எலான் மஸ்க் டுவிட்டர் உரிமையாளரானதை தொடர்ந்து அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் ‘புளூ டிக்’ பயன்படுத்துகின்றனர்.

இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர் தளத்தில் பெயருக்கு அருகில் நீலநிற புளூ டிக் குறியீடு குறிக்கப்பட்டிருக்கும்.

இதன்மூலம், குறிப்பிட்ட பயனர்கள் டுவிட்டரில் பல்வேறு அம்சங்களை பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த நிலையில், அதிகாரப்பூர்வ கணக்கு என்பதை உறுதிபடுத்தும் புளூ டிக்கிற்காக பயனாளர்களிடம் மாதம்தோறும் ரூ.1600 வரை(19.99 அமெரிக்க டாலர்கள்) கட்டணம் வசூலிக்க டுவிட்டர் நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் டுவிட்டர் ‘புளூ டிக்கிற்கு’ இனி மாதம் 8 டாலர் (660 இந்திய ரூபாய் மதிப்பு) கட்டணம் வசூல் செய்யப்பட உள்ளதாக எலான் மஸ்க் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மேலும் கட்டணம் செலுத்துவோர், வீடியோ, ஆடியோ போன்றவற்றை கூடுதல் நேரத்திற்கு பதிவுசெய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிக வருவாய் தேவை என்றும், வருவாயை உருவாக்க விளம்பரதாரர்களை மட்டும் நம்பி இருக்க முடியாது என்றும் அவர் டுவிட்டரில் விளக்கி உள்ளார்.

புளூ டிக்க்கான சரிபார்ப்பு செயல்முறைக்காக டுவிட்டர் என்ஜினியர்களுக்கு நவம்பர் 7ம் தேதிக்குள் பணம் செலுத்தி சரிபார்ப்பு வசதியை தொடங்க வேண்டும் அல்லது வேலை இழக்க நேரிடும் என மஸ்க் கெடு விதித்துள்ளார். சில டுவிட்டர் ஊழியர்கள் ஒரு நாளைக்கு 12 மணிநேரமும் வாரத்தில் ஏழு நாட்களும் வேலை செய்யும்படி கேட்கப்பட்டுள்ளனர் என்று சிஎன்பிசி ஆதாரங்கள் கூறுகின்றன.

ஓவர் டைம் ஊதியம் அல்லது வேலை நேரம், அல்லது வேலை பாதுகாப்பு பற்றி” எந்த விவாதமும் இல்லாமல் கூடுதல் நேரம் வேலை செய்யும்படி ஊழியர்கள் கேட்கப்பட்டுள்ளனர் என்றும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

என்ஜினியர்களுக்கு நவம்பர் தொடக்கத்தில் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறினால், அவர்கள் வேலையை இழக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது. எலோன் மஸ்க் 50 சதவீத ஆட்குறைப்பு என மிரட்டி, ஊழியர்களை உத்தரவுக்கு இணங்க கட்டாயப்படுத்துவதாக கூறப்படுகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!