மருமகளை சுட்டு கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி மாமனார் அதிரடி கைது!

அமெரிக்காவில் மருமகளை சுட்டு கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி மாமனாரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் சான் ஜோஸ் பகுதியில் வசித்து வந்தவர் குர்பிரீத் கவுர் தோசன்ஜ்.

இவரது மாமனாரான சீத்தல் சிங் தோசன்ஜ் என்பவர், தனது மருமகளை வால்மார்ட் கடையின் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் வைத்து துப்பாக்கியால் சுட்டு கொன்றுள்ளார்.

இந்த வழக்கில் போலீசார் 74 வயதுடைய சீத்தல் சிங்கை கைது செய்துள்ளனர். இதுபற்றி போலீசார் கூறும்போது, கடைசியாக தனது மாமாவிடம் குர்பிரீத் சிங் தொலைபேசி வழியே பேசியுள்ளார்.

அதில், சீத்தல் சிங் தன்னை கொல்ல வருகிறார் என அச்சமுடன் குர்பிரீத் கவுர் அலறியுள்ளார். அவர் பேசிய சில நிமிடங்களில் குர்பிரீத் கொல்லப்பட்டு உள்ளார். இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சிகளின் பதிவுகள் போலீசாருக்கு கிடைத்து உள்ளன.

இதனடிப்படையில் சீத்தல் சிங்கை பிரெஸ்னோவில் உள்ள அவரது வீட்டில் வைத்து போலீசார் கைது செய்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

சமீபத்தில், அமெரிக்காவில் பஞ்சாப்பை சேர்ந்த 8 மாத குழந்தை உள்ளிட்ட 4 பேர் கொண்ட இந்திய குடும்பத்தினர் படுகொலை செய்யப்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள் மற்றொரு கொலை நடந்துள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!