ஐக்கிய நாடுகள் பொதுச்சபை கூட்டத்தில் கைலாசா சார்பில் பெண் தூதர் பங்கேற்பு!

சாமியார் நித்யானந்தா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்காக இலங்கையிடம் தஞ்சம் கேட்டதாக தகவல்கள் வெளியானது. ஆனால் அதற்கு இலங்கை தரப்பில் இருந்து எந்த பதிலும் இல்லை. இதற்கிடையே நித்யானந்தா, பல்வேறு சிறிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்து வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே கைலாசா நாட்டை ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்துள்ளதாக அவரது ஆதரவாளர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில், நியூயார்க்கில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் 77-வது பொதுச்சபை கூட்டத்தில் ஏராளமான சிறிய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்று பேசி உள்ளனர்.

இந்த கூட்டத்தில் கைலாசா சார்பில் ஐக்கிய நாடுகள் சபைக்கான தூதர் என்ற பெயரில் நித்யானந்தாவின் சிஷ்யைகளில் ஒருவரான விஜயபிரியா பங்கேற்றுள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டம் உள்ளிட்ட சர்வதேச மாநாடுகள் நடைபெறும் போது அதையொட்டி கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்தப்படுவது வழக்கம். இந்த கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில் பங்கேற்ற விஜயபிரியா கழுத்தில் ருத்ராட்சம், நீண்ட ஜடாமுடியுடன் இருந்தார்.

கையில் நித்யானந்தாவின் படத்தை பச்சை குத்தியிருந்த அவர் ஆப்ரிக்கா மற்றும் கரீபியன் நாடுகளின் தலைவர்களை சந்தித்து நித்யானந்தா உருவப்படத்துடன் கூடிய பெரிய புத்தகத்தை வழங்கினர். மேலும், அந்த நாடுகளின் தலைவர்களுடன் எடுத்த புகைப்படங்களை கைலாசா நாட்டின் அதிகாரப்பூர்வ சமூகவலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!