விமானத்தில் ஜன்னலை உதைத்து… ரகளையில் ஈடுபட்ட பயணி – பாக். விமான நிறுவனம் அதிரடி

பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் இருந்து துபாய் நோக்கி பாகிஸ்தான் சர்வதேச விமான நிறுவனத்தின் பி.கே.-283 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.

அந்த விமானம் நடுவானில் சென்று கொண்டிருக்கும்போது, திடீரென்று பயணி ஒருவர் எழுந்து விமான ஊழியர்களிடம் மோதலில் ஈடுபட்டார். இதன்பின்னர், இருக்கைகளை கைகளால் குத்தியும், விமான ஜன்னலை சேதப்படுத்தும் நோக்கில், கால்களால் கடுமையாக உதைத்தும் உள்ளார்.

இருக்கைகளின் நடுவில் பயணிகள் உள்ளிட்டோர் நடந்து செல்லும் பகுதியில் காலை நீட்டி குப்புற படுத்து கொள்வது போன்ற பல விசித்திர செயல்களிலும் ஈடுபட்டு உள்ளார். அவரது வன்முறை அதிகரித்ததும், சூழ்நிலையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக வந்த பணியாளர்கள் மீதும் அவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதனை தொடர்ந்து, விமான சட்டத்தின்படி, விரும்பத்தகாத வேறு சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அந்த பயணியை இருக்கை ஒன்றில் கயிறால் கட்டி வைத்து உள்ளனர்.

இதன்பின்பு, விமானி உடனடியாக துபாயில் உள்ள விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரியை தொடர்பு கொண்டு பாதுகாப்பு கோரியுள்ளார்.

விமானம் துபாயில் இறங்கியதும் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பயணியை தங்களது காவலுக்கு கொண்டு சென்று உள்ளனர். இந்த சம்பவம் எதிரொலியாக அந்த பயணியை பாகிஸ்தான் விமான நிறுவனம் கருப்பு பட்டியலில் வைத்து உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!