பிரபல நடிகர் பிரபு -ராம்குமார் மீது வழக்கு போட்ட சகோதரிகள்!

மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிரபு, ராம்குமார் என இரு மகன்களும், சாந்தி, ராஜ்வி என இரு மகள்களும் உள்ளனர். கடந்த 2001-ஆம் ஆண்டு நடிகர் சிவாஜி கணேசன் மரணத்துக்குப் பின், 270 கோடி ரூபாய் சொத்துக்களை முறையாக நிர்வகிக்கவில்லை எனவும், வீடுகளின் வாடகை பங்கை தங்களுக்கு வழங்காமல் ஏமாற்றியதாகவும் கூறி சாந்தி மற்றும் ராஜ்வி ஆகிய இருவரும் சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

அதில், இந்து வாரிசுரிமை சட்டத்தில் 2005-ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட திருத்தத்தின்படி தந்தை சிவாஜி கணேசனின் சொத்துக்களில் தங்களுக்கும் உரிமை உள்ளது. எனவே, பாகப்பிரிவினை செய்து தர உத்தரவிட வேண்டும்.

தங்களுக்கு தெரியாமல் தந்தை சொத்துக்களை ராம்குமார், பிரபு விற்றுள்ளனர். அந்த விற்பனை பத்திரங்களை செல்லாது என அறிவிக்க வேண்டும். ஆயிரம் சவரன் தங்க நகைகளையும், 500 கிலோ வெள்ளி பொருட்களையும் பிரபுவும், ராம்குமாரும் அபகரித்துக் கொண்டனர்.

சாந்தி தியேட்டரில் இருந்த 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை பிரபுவும், ராம்குமாரும் தங்கள் பெயருக்கு மாற்றிக் கொண்டனர். நடிகர் சிவாஜி கணேசன் எழுதி வைத்ததாக கூறப்படும் உயில் ஜோடிக்கப்பட்டது.

பொது அதிகார பத்திரத்தில் கையெழுத்து பெற்று தங்களை ராம்குமாரும், பிரபுவும் ஏமாற்றி விட்டனர். இவ்வாறு அதில் கூறியுள்ளனர். இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி முன் விசாரணைக்கு வந்தது. இதையடுத்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!