தாய்லாந்து ஓட்டல் அறையிலேயே முடங்கிய கோத்தபய ராஜபக்சே!

அரசியல் போராட்டம் காரணமாக நாட்டை விட்டு வெளியேறிய இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே, முதலில் மாலத்தீவுக்கும், பின்னர் சிங்கப்பூருக்கும் சென்றார். சிங்கப்பூரில் கோத்தபயவுக்கான அனுமதி காலம் நேற்று முன்தினம் முடிந்தநிலையில், அவரது வேண்டுகோளை ஏற்று தாய்லாந்தில் தற்காலிகமாக தங்க அந்நாட்டு அரசு அனுமதி அளித்தது.

அதையடுத்து நேற்று முன்தினம் இரவு ஒரு தனி விமானம் மூலம் கோத்தபய ராஜபக்சே, பாங்காக்கில் உள்ள ராணுவ விமான தளத்தில் வந்து இறங்கினார். அவருடன் மேலும் 3 பேர் வந்தனர். கோத்தபய முதலில் புகெட் நகரில் உள்ள விமான நிலையத்தில் வந்திறங்க முடிவு செய்திருந்தார்.

ஆனால் அதுகுறித்த தகவல் கசியக்கூடும் என்பதால் அந்த திட்டம் மாற்றப்பட்டது. பாங்காக் ராணுவ விமான தளத்தில் இருந்து, பெயர் வெளியிடப்படாத ஓட்டலுக்கு கோத்தபய ராஜபக்சே அழைத்து செல்லப்பட்டார். அங்கு, சாதாரண உடையில் உள்ள தாய்லாந்து சிறப்பு பிரிவு போலீசார் காவல் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் பாதுகாப்பு கருதி, ஓட்டலிலேயே தங்கியிருக்கும்படியும், வெளியே செல்ல வேண்டாம் என்றும் கோத்தபயவை தாய்லாந்து அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!