மனைவியை கடப்பாரையால் அடித்துக்கொன்ற கணவர்…. அதிர வைத்த காரணம்!

நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் மனைவியை கடப்பாரையால் அடித்துக்கொன்ற கணவர் போலீசில் சரண் அடைந்தார்.

குன்றத்தூரை அடுத்த காலடி பேட்டை, அம்பேத்கர் குறுக்கு தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 45). தனியார் கிளப்பில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அலமேலு (42). பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்து வந்த இவர், தற்போது வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார்.

இவர்களுக்கு மோனிஷா, வசுந்தரா என 2 மகள்கள் உள்ளனர். மகள்கள் இருவரும் நேற்று காலை வழக்கம்போல் கல்லூரிக்கு சென்று விட்டனர். வீட்டில் ரமேஷ், அலமேலு மட்டும் இருந்தனர். நேற்று மதியம் அவரது வீட்டில் அலமேலுவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர்.

கதவு உள்பக்கமாக பூட்டி இருந்ததால் கதவை உடைத்து உள்ளே செல்ல முயன்றனர். அதற்குள் கதவை திறந்து வெளியே வந்த ரமேஷ், அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் அக்கம், பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கு அலமேலு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார், அலமேலு உடலை பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் தப்பி ஓடிய ரமேஷ், போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அலமேலுவின் நடத்தையில் சந்தேகப்பட்ட ரமேஷ், அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்தார். இதனால் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு அலமேலு அயனாவரத்தில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

அங்கிருந்து சமாதானம் பேசி நேற்று முன்தினம் தனது வீட்டுக்கு அலமேலுவை அழைத்து வந்தார். இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரம் அடைந்த ரமேஷ், வீட்டில் இருந்த கடப்பாரையால் அலமேலுவின் தலையில் அடித்துக்கொன்றதும், பின்னர் போலீசில் சரண் அடைந்ததும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!