சீதா ராமம் திரைவிமர்சனம்!

காஷ்மீரில் ராணுவ வீரராக இருக்கும் துல்கர் சல்மானுக்கு சீதா மகாலட்சுமி என்ற பெயரில் முகவரி இல்லாமல் தொடர்ந்து காதல் கடிதங்கள் வருகிறது. கடிதம் எழுதும் பெண்ணை தேடிக் கண்டு பிடித்து, பின்னர் இருவரும் காதலை தொடர்கிறார்கள். ஒரு கட்டத்தில் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதியை கொல்லும் பணி துல்கர்சல்மானுக்கு வருகிறது.

இதற்காக எல்லை தாண்டி செல்கிறார். அவர் திரும்பி வந்தாரா? சீதா மகாலட்சுமி யார்? இவர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பது படத்தின் மீதி கதை. துல்கர் சல்மான் நடிப்பின் மூலம் படத்தை அழகாக நகர்த்துகிறார். மிருணாள் தாகூரிடம் வெளிப்படுத்தும் காதல், காஷ்மீர் மோதலை தடுக்கும் விவேகம், எல்லை தாண்டி எதிரிகளை வீழ்த்தும் வீரம், சிறை சித்ரவதை என்று கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் துல்கர்.

அவரது காதலியாக வரும் மிருணாள் தாகூர் வசீகரிக்கிறார். காதல் உணர்வை வெளிப்படுத்துவதிலும் ஜீவன். அவர் யார் என்ற உண்மை வெளிப்படுவதில் திருப்பம். பாகிஸ்தானை சேர்ந்த அப்ரீத்தாக வரும் ராஷ்மிகாவுக்கு அழுத்தமான வேடம். அதை அவர் சிறப்பாக செய்து முடித்துள்ளார். கிளைமாக்சில் தான் யார் என்று அறிந்து கதறும்போது படம் பார்ப்பவர்களை உருக வைக்கிறார்.

ராணுவ உயர் அதிகாரிகளாக வரும் பிரகாஷ்ராஜ், கவுதம் மேனன், சுமந்த், சச்சின் படேகர், மற்றும் தருண் பாஸ்கர் ஆகியோர் யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர். ஒரு காதல் கதையை கவித்துவமாக செதுக்கி கவனம் பெறுகிறார் இயக்குனர் ஹனு ராகவபுடி. காதல் காட்சியின் வடிவமைப்பின் மூலம் அனைவரின் கவர்ந்துள்ளார். சரியான திரைக்கதையின் மூலம் படத்தை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கிறார்.

படத்தின் ஆரம்ப காட்சிகளின் நீளத்தை குறைத்து இருக்கலாம். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை கதையில் ஒன்ற வைக்கிறது, பி.எஸ்.வினோத், ஸ்ரேயாஸ் கிருஷ்ணாவின் கேமரா காஷ்மீர் அழகை அள்ளுகிறது. மொத்தத்தில் “சீதா ராமம்” அழகு.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!