கூகுள் நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில், நடப்பு ஆண்டின் 2வது காலாண்டில், வருவாய் எதிர்பார்த்த அளவை விட அதிகம் குறைந்து உள்ளது. முதல் காலாண்டிலும் இந்த நிலையே காணப்பட்டது என தெரிவித்து இருந்தது. இதன்படி, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது நடப்பு காலாண்டின் வளர்ச்சி 13 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது என அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
பல்வேறு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், தங்களது நூற்றுக்கணக்கான பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவது அல்லது வேலைக்கு ஆட்களை பணியமர்த்தும் பணியை தாமதப்படுத்துவது ஆகியவற்றை சமீப நாட்களில் செய்து வந்தது. அந்நிறுவனங்களில், முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார நடவடிக்கையில் ஏற்பட்ட சரிவை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்நடவடிக்கை கூகுள் நிறுவனத்திலும் நடக்க கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
இதற்கேற்ப, சமீபத்தில், குறைந்தது 2 வாரங்களுக்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவது நிறுத்தி வைக்கப்படுகிறது என அந்நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த நடவடிக்கை மீதமுள்ள ஆண்டின் காலகட்டத்திலும் நீடிக்கும் என அறிவிப்பு வெளியானது ஊழியர்களை அதிர்ச்சி அடைய செய்தது.
இதனை தொடர்ந்து சமீபத்தில், கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களின் எண்ணிக்கையை மறுஆய்வு செய்யும் பணியை செய்து, அடுத்த 3 மாதங்களுக்கு, முன்னுரிமை வாய்ந்த பணியாளர்கள் அடங்கிய ஒரு புதிய குழுவை ஒழுங்குபடுத்துவதற்கான பணியை மேற்கொள்ள முடிவு செய்தது. இதன் தொடர்ச்சியாக, பணியை மையமாக கொண்டு, தயாரிப்புகளில் அதிக கவனம் செலுத்தும், அதிக வாடிக்கையாளர்களை மையமாக கொண்ட ஒரு கலாச்சாரம் உருவாக்கும்படி தனது பணியாளர்களை கூகுள் நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கேட்டு கொண்டார்.
கவன சிதறல்களை எப்படி குறைப்பது மற்றும் தயாரிப்பின் சிறப்பம்சம் மற்றும் உற்பத்தி திறன் ஆகியவற்றை எப்படி தரம் உயர்த்துவது என்பது பற்றி நாம் சிந்திக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார். ஊழியர்களின் செயல்பாடுகளில் சுந்தர் பிச்சைக்கு மகிழ்ச்சி இல்லை என கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து ஊழியர்கள் பங்கேற்ற கூட்டம் ஒன்றை கூட்டி, அதில் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்ததுடன், திறமையாக பணியாற்றும்படியும், தயாரிப்புகளை மேம்படுத்தவும், வாடிக்கையாளர்களுக்கு உதவிடுவதில் அதிக கவனம் செலுத்தும்படியும் அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
உற்பத்தி திறன் குறைந்துள்ளது என சுந்தர் பிச்சை நினைப்பதுடன், அவற்றை கவனத்தில் கொள்ளும்போது, நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களின் எண்ணிக்கை அதிகளவில் உள்ளது போல் தோன்றுகிறது என்றும் அவர் நினைத்து உள்ளார். இதனால், நிறுவனத்தில் அதிக ஊழியர்கள் உள்ளனர் என்றும் ஆனால், அவர்களில் பலர் திறமையாக பணியாற்றவோ அல்லது அவற்றில் கவனம் செலுத்தவோ இல்லை என்று அவர் உணர்கிறார். திறமை, உற்பத்தி பற்றாக்குறையால், செலவை கட்டுப்படுத்த சில பணியாளர்களை வேலையில் இருந்து அந்நிறுவனம் நீக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!