ஆப்கானிஸ்தான் மத குருவுக்கு நடந்த கொடூரம்!

நாசிக்கில் ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த மத குரு துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

மத குரு

ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்தவர் குவாஜா சையத்(வயது35). சுபிபாபா என மற்றொரு பெயரிலும் அழைக்கப்பட்டு வந்தார். கடந்த 4 ஆண்டுக்கு முன்பு அகதியாக இந்தியா வந்த அவர் டெல்லி, கர்நாடகாவில் தங்கி இருந்தார். இதன் பின்னர் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டம் சின்னார் தாலுகா வாவி என்ற இடத்தில் ஒரு பெண்ணுடன் வசித்து வந்தார்.

சுபி மத குருவாக இருந்த குவாஜா சையத் யூ-டியூப்பில் பிரபலமாகவும் இருந்தார். சமூகவலைத்தளத்தில் இவரை ஏராளமானோர் பின்தொடர்ந்து வந்தனர். மேலும் அவருக்கு ஏராளமாக நன்கொடை வந்ததாகவும் கூறப்படுகிறது.

சுட்டுக்கொலை

இந்தநிலையில் குவாஜா சையத் நேற்று மாலை நாசிக் மாவட்டம் யோலோ டவுண் எம்.ஐ.டி.சி. பகுதியில் நடந்த பூமி பூஜையில் கலந்து கொண்டுவிட்டு, அங்கிருந்து புறப்பட காரில் ஏறினார். அப்போது அவரது கார் டிரைவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து குவாஜா சையத்தை சுட்டு விட்டு தப்பினார்.

இதில் நெற்றியில் குண்டு பாய்ந்ததால் குவாஜா சையத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மதகுருவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

காரணம் என்ன?

சொத்து மற்றும் பணத்தகராறில் இந்த கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். மத குரு குவாஜா சையத் அகதி என்பதால் அவரால் இந்தியாவில் சொத்து வாங்க முடியாது.

இருப்பினும் தனக்கு நெருக்கமானவர்கள் பெயரில் சொத்து வாங்கி வந்ததாகவும், சமீபத்தில் கூட அவர் வசித்த பகுதியில் 15 ஏக்கர் நிலம் வாங்கியதாகவும் தெரியவந்தது.

இந்த படுகொலையில் டிரைவர் உள்பட 4 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதில் ஒருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் டிரைவர் உள்பட மற்ற 3 பேரை வலைவீசி தேடிவருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!