இரட்டை குழந்தைகளை சுமந்த கர்ப்பிணிக்கு நடந்த விபரீதம்..!

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜ்புரம் பகுதியை சேர்ந்தவர் மதன் குமார். கூலி தொழிலாளி. இவரது மனைவி சங்கரி (வயது 20) நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவருடைய வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் உருவாகியிருந்தன.

இன்று அதிகாலை அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. காலை 5.20 மணிக்கு பிரசவத்திற்காக வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிரசவ சிகிச்சையின் போது குழந்தைகள் பிறப்பதற்கு முன்பே சங்கரி இறந்தார். இந்நிலையில் சங்கரியின் உறவினர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மகப்பேறு டாக்டர்கள் இல்லாமல் பணியில் இருந்த நர்சுகள் மட்டுமே பிரசவம் பார்த்தனர். இதனால்தான் சங்கரி இறந்து விட்டார் எனக்கூறி ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டனர்.

சம்பவ இடத்திற்கு வாணியம்பாடி டவுன் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கர்ப்பிணி இறந்த சம்பவம் குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!