பெற்றோரை இழந்த சிறுமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய கிராமமக்கள்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயசீலன் (வயது 47 )கூலி வேலை செய்து வந்தார்.

இவரது மனைவி மகேஸ்வரி இவர்களது மகன்கள் சக்திவேல் (17) ரஞ்சித் (15) மகள் வரலட்சுமி (11). 10 ஆண்டுகளுக்கு முன்பு மகேஸ்வரி இறந்துவிட்டார். ஜெயசீலன் கூலி வேலை செய்து குழந்தைகளை வளர்த்து வந்தார். கடந்த 10-ந் தேதி திடீரென ஜெயசீலன் இறந்தார்.

தந்தையின் இறுதிச் சடங்கு செய்யக்கூட பணமில்லாமல் அவரது மகன்கள், மகள் தவித்தனர். இதனால் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து இறுதி சடங்குகளை செய்தனர். அவர் இறப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு சிறுமி வரலட்சுமி பூப்பெய்தினார். அதன்பிறகு அவருக்கு செய்ய வேண்டிய சடங்குகளை பெற்றோர் இல்லாததால் நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து அவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்த முடிவு செய்தனர். தங்களால் இயன்ற அளவுக்கு பணம் வசூலித்து வரலட்சுமி வசிக்கும் வீட்டின் முன்பாக பந்தல் அமைத்து வரலட்சுமிக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தினர்.

மேலும் தனியார் தொண்டு நிறுவன அமைப்பினர் வரலட்சுமிக்கு புத்தாடை அழகு சாதன பொருட்கள் உட்பட 21 தட்டுகளில் சீர்வரிசை செய்து விழாவை விமரிசையாக நடத்த ஒத்துழைப்பு கொடுத்தனர். விழாவிற்கு வந்த அனைவருக்கும் ஊர் மக்கள் விருந்து பரிமாறினர்.

முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறுமி வரலட்சுமியை ஆசீர்வதித்து சீர் செய்தார். பின்னர் எந்த உதவி வேண்டுமானாலும் செய்கிறேன் என அவர் வாக்குறுதி அளித்தார். ஊர்மக்கள் ஒன்றுகூடி வரலட்சுமிக்கு விழா நடத்தியது கிராம மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!