1 முதல் 9-ம் எண் வரை பிறந்தவர்களுக்கான வாழ்க்கை எப்படி இருக்கும்!

ஒருவருக்கு பெயர் எண் அதிர்ஷ்டத்தை தருவதும் துரதிர்ஷ்டத்தை தருவதும் அவரவர் கர்ம வினையே காரணம். இந்த முறையில் பெயர் அமையாதவர்கள் அவர்களுடைய பிறந்த எண்ணிற்குரிய வழிபாட்டு முறையை கடைபிடித்தால் வெற்றி நிச்சயமாகும்.

பலர் ஜோதிடத்தையும், எண்ணியலையும் பிரித்துப் பார்க்கிறார்கள். அது தவறு. ஒருவருக்கு சுய ஜாதகத்தை மீறிய நற்பலன்கள் கிடைக்கும் வாய்ப்புகள் குறைவு.

பிறவி எண், விதி எண் இவற்றோடு ஒருவருடைய ஜாதக ரீதியாக யோகத்தை தரக்கூடிய கிரகத்தின் எண்ணில் பெயரை அமைத்துக் கொண்டால் பலன் நூறு சதவிகிதம் உறுதி.

பிறவி எண், விதி எண் இவற்றோடு ஜாதகத்தையும் ஒப்பிட்டு, அந்த ஜாதகப்படி எந்த கிரகம் நன்மை தரும் என்பதை ஆய்வு செய்து அந்த கிரகத்திற்குரிய எண், பிறந்த தேதி எண்ணிற்கு பொருத்தமாக இருக்கிறதா என ஆராய்ந்து அதற்கு பொருத்தமான எண்ணில் பெயரை அமைப்பதே மிக உன்னத முறையாகும்.

1-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் : (பிறந்த தேதி 1, 10, 19, 28)

இது சூரியனின் ஆதிக்கம் பெற்ற எண் என்பதால் ஞாயிற்று கிழமை பிரார்த்தனைகளை செய்வது விசேஷமாகும். தினமும் அதிகாலையில் சூரிய நமஸ்காரம் செய்து ஆதித்திய இருதயம் பாராயணம் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தையும் பலத்தையும் பெருக்கமுடியும். அனைத்து விதமான வெற்றிகளையும் அடைய முடியும். சூரியனின் அதிதேவதையான ஈஸ்வரனை வழிபட்டால் புகழ், அந்தஸ்து, கவுரவம் கூடும். பகைவரை வெல்லும் துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். மேலும் குதிரைக்கு உணவளிப்பதன் மூலம் பிரச்சினைகள் உடனே தீரும்.

2-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் : (பிறந்த தேதி 2, 11, 20, 29)

இது சந்திரனின் ஆதிக்கம் பெற்ற எண் என்பதால் திங்கட்கிழமை அம்பிகை வழிபாடு செய்வது சிறப்பு. மூன்றாம் பிறை சந்திரனை தரிசிக்கலாம்.பவுர்ணமியில் சத்ய நாராயணர் விரதம் இருக்க வேண்டும் அல்லது பவுர்ணமி பூஜைகளில் கலந்து கொள்ளலாம். பச்சரிசிமாவில் மாவிளக்கு செய்து பிரதோஷ வேளையில் நந்திக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். நீர், பசும்பால், அரிசி போன்றவற்றை திங்கட்கிழமைகளில் தானம் செய்ய வேண்டும். சோமவார விரதம் கடைபிடிக்க வாழ்க்கை ஒளிமயமாகும். மனதிற்கு தெம்பும், சக்தியும் உண்டாகும். சுகமான வாழ்க்கை அமையும். மேலும் மீன், ஆமை போன்ற நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவு வழங்கினால் பாதிப்பு உடனே அகலும்.

3-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் : (பிறந்த தேதி 3, 12, 21, 30)

குருவின் ஆதிக்கம் பெற்ற எண் என்பதால் வியாழக்கிழமை வழிபாட்டிற்கு உகந்த நாள். அந்தணர்களின் தேவை அறிந்து உதவலாம். மஞ்சள் நிற பூக்களால் இறைவனை பூஜிக்கலாம். குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கலாம். வியாழக் கிழமைகளில் சித்தர்களின் ஜீவ சமாதியை வழிபாடு செய்யலாம் . மேலும் திருச்செந்தூர் சென்று முருகனை வழிபடுவதன் மூலம் சந்தோஷமான மண வாழ்க்கை,மக்கட் செல்வமும் அமையும். அத்துடன் பசு மாடுகளுக்கு அகத்திக்கீரை , யானைக்கு அருகம்புல், கரும்பு போன்ற உணவு தர இன்னல்கள் தீரும்.

4-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் : (பிறந்த தேதி 4, 13, 22, 31)

இது ராகுவின் ஆதிக்கம் பெற்ற எண் என்பதால் அனைத்து வழிபாடுகளையும் ஞாயிறு அல்லது செவ்வாய் கிழமைகளில் செய்வது நல்லது. இவர்கள் ராகுவின் அதிதேவதையான ஸ்ரீ துர்க்கை அல்லது காளியை வழிபட்டால் முன்னேற்றம் உண்டாகும்.பஞ்சமி திதியில் கருட வழிபாடு செய்யலாம். இதனால் வாழ்வில் பொன், பொருள் சேர்க்கை, முன்னேற்றம் உண்டாகும். கெடுபலன்கள் குறைய நாய்களுக்கு பிஸ்கட் கொடுக்கலாம்.

5-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் : (பிறந்த தேதி 5,14,23)

புதனின் ஆதிக்கம் பெற்ற எண் என்பதால் புதன் கிழமை வழிபாடு செய்ய உகந்த நாள். புதனின் அதிதேவதை மகா விஷ்ணுவை துளசி மாலை மற்றும் மணம் கமழும் மலர்களால் வழிபடலாம். விஷ்ணு சகஸ்ஹர நாமம் பாராயணம் செய்யலாம். மதுரை மீனாட்சியம்மனை புதன் கிழமை வழிபட வியாபாரம் செழிக்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும். கல்வியில் உயர்வு உண்டாகும். மேலும் கிளிகள், பட்சிகளுக்கும் உணவுகள் மற்றும் தண்ணீர் வைக்கலாம்.

6-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் : (பிறந்த தேதி 6,15, 24)

சுக்கிரன் ஆதிக்கம் பெற்ற எண் என்பதால் வெள்ளிக்கிழமை வழிபாட்டு முறைகளை கடைபிடிப்பது சிறப்பு. சுக்கிரனின் அதிதேவதை மகாலட்சுமித் தாயாருக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும் வெள்ளிக்கிழமைகளில் நெய்தீபம் ஏற்றி லலிதா சகஸ்ர நாமப்பாராயணம் செய்து அஷ்டலட்சுமிகளை பூஜிக்க வேண்டும். சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம் போன்ற மங்கள பொருட்களை வழங்களாம். கோ பூஜை மிகச் சிறப்பு. இதனால் குறைகள் தீர்ந்து சகல ஐஸ்வர்யங்களும் பெருகும். இன்பமான வாழ்வு அமையும். அதிர்ஷ்டம் கூடி வரும்.

7-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் : (பிறந்த தேதி 7, 16, 25)

கேதுவின் ஆதிக்கம் பெற்ற எண் என்பதால் திங்கட்கிழமை அதன் அதிதேவதை விநாயகரை வழிபட வேண்டும். அறுகம்புல் மாலை அணிவித்து கொழுக்கட்டை படைத்து சங்கடஹர சதுர்த்தியன்று விநாயகர் கவசம் படிக்க வேண்டும். இதனால் தடங்கல் இல்லாமல் காரிய சித்தி உண்டாகும். செல்வ வளம் பெருகும்.மிக எளிமையாக எறும்புகளுக்கு சர்க்கரை, மாவுப்பொருட்களை உணவாக கொடுப்பதும் நல்ல பலன்களைத் தரும்.

8-ம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் : (பிறந்த தேதி 8, 17, 26)

சனி பகவானின் ஆதிக்கம் பெற்ற எண் என்பதால் சனிக்கிழமை வழிபாடு சிறப்பு. சனி பகவானின் அருளைப் பெற கருப்பு நிற விலங்குகளான எருமை, கருப்பு நிற நாய் மற்றும் கருப்பு நிறப் பறவையான காகம் உள்ளிட்டவைகளுக்கு உணவளிக்கலாம். சனிக்கிழமை வரும் பிரதோஷ தினத்தில் சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்து வழிபட்டால் தொழில் வளரும். ஆரோக்கியம் மேம்படும். மேலும் ஆஞ்சநேயர் வழிபாடு, சுவாமி ஐயப்பன் வழிபாடு வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்யும்.

9 எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் : (பிறந்த தேதி 9, 18, 27)

செவ்வாயின் ஆதிக்கம் பெற்ற எண் என்பதால் செவ்வாய் கிழமை விரதம் மற்றும் வழிபாடு சிறப்பு. செவ்வாயின் அதிதேவதை முருகப் பெருமானை வழிபடலாம். கந்த சஷ்டி கவசம் கேட்க வேண்டும் அல்லது பாராயணம் செய்தல் வேண்டும். செவ்வாய் கிழமை சிவப்பு நிற ஆடை அணிந்து விரதமிருந்து மலை மீது உள்ள முருகனை வழிபட பூமி, உடன் பிறந்தவர்கள் மூலம் எழும் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். மேலும் ஆடு, செம்மறி ஆடு, குரங்குகளுக்கும் உணவு கொடுப்பதன் மூலம் கெட்ட வினைகள் குறைகின்றது. திருமணத் தடையும் அகலும்.

ஒருவருடைய ஜாதகத்தில் எத்தனை விதமான யோகங்கள் இருந்தாலும் முழுமையான பலன் கிடைக்க உடல் மற்றும் உயிர் எண்ணுக்கு ஏற்ற பெயர் வைப்பதால் ஜாதகத்தில் உள்ள கெடு பலன்களை குறைக்கலாம். ஒருவருடைய ஜாதகத்தில் மோசமான யோகம் இருந்தாலும் அதை பெயர் எண் அதிர்வலைகள் மூலம் சீராக்க முடியும். ஆகவே வாழ்க்கையில் வெற்றி பெற பிறந்த ஜாதகம் நன்றாக இருக்க வேண்டும். அல்லது பிறந்த தேதியின் உடல், உயிர் எண்ணிற்கு ஏற்ற படி பெயர் வைத்துக் கொள்வது உத்தமம். எண்ணியல்படி ஒருவர் பெயர் வைத்துக் கொண்டால் மட்டும் லட்சாதிபதியாகவோ, கோடீஸ்வரராகவோ ஆக முடியாது. எனவே பெயரை மாற்றிக் கொண்டு வீட்டில் உட்கார்ந்து இருந்தாலும் ஒரு பலனும் கிடைக்காது. உழைத்தால் மட்டுமே உழைப்பிற்கேற்ப பலன் உண்டு. எனவே ஜாதகம், எண்ணிணியல் உழைப்பு இவை மூன்றும் சரியான முறையில் ஒன்று சேர்ந்தால் ஒருவரது வாழ்க்கை கண்டிப்பாக உயரும். ஆகவே பிறந்த ஜாதகத்துடன் எண்ணியலையை பயன்படுத்தும் போது வெற்றி நிச்சயம்.

‘பிரசன்ன ஜோதிடர்’ ஐ.ஆனந்தி செல்: 98652 20406-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!