விநாயகர் சிலையில் கண் திறப்பு ?- பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு!

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் பெட்டட்டி சுங்கம் கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த பகுதியில் விநாயகர் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் தினமும், காலை, மாலை வேளைகளில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இந்த கோவிலுக்கு பெட்டட்டி சுங்கம் பகுதி மக்கள் மட்டுமின்றி இளித்தொரை, அண்ணா நகர், காந்திநகர், அணியாடா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மக்களும் வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்நிலையில் இந்த கோவிலில் இன்று காலை வழக்கம் போல் கோவில் திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் விநாயகர் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சுவாமிக்கு தீபாராதனை நடந்து கொண்டிருந்த போது விநாயகர் சிலையின் ஒரு பகுதி கண் திறந்து மூடியதாக கூறப்படுகிறது.

ஒரு சில நொடிகள் இது போன்று விநாயகர் சிலை கண் திறந்து மூடியதாக அங்கிருந்த பக்தர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே விநாயகர் சிலை கண் திறந்த தகவல் அந்த கிராமம் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராம பகுதிகளிலும் வேகமாக பரவியது.

இதையடுத்து அப்பகுதி மக்களும் விநாயகர் சிலை கண் திறந்த காட்சியை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் கோவிலுக்கு வந்தனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!