இடிந்து விழுந்த வீடு… இரண்டு மூதாட்டிகளுக்கு நடந்த பரிதாபம்..!

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியம் மேல் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னம்மா (வயது 102). இவரது மகள்கள் காது கேட்காத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளிகளான நாகம்மாள்(72), சுந்தரி (65).

இவர்கள் 3 பேரும் ஒன்றாக குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். கடந்த வாரம் பெய்த தொடர் மழை காரணமாக குடிசை வீட்டின் முன் சுவர்கள் ஈரமாக இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல 3 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை வீட்டின் சுவர்கள் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் நாகம்மாள்,சுந்தரி இருவரும் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அதே குடிசை வீட்டில் சமையல் அறையில் இருந்த மூதாட்டி சின்னம்மா உயிர் தப்பினார்.

அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து பார்த்து ஊராட்சி மன்றத் தலைவர் டி.ஜி .முருகனுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக போலீசாருக்கும், தீயனைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் மீட்டு குழுவினர் இடிபாடுகளில் சிக்கி இருந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கந்திலி போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுவர் இடிந்து காது கேளாத வாய் பேசா முடியாத 2 மூதாட்டி பெண்கள் பலியான சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!