முகத்தை பளபளப்பாக்கும் ஆலிவ் எண்ணெய்!

சருமத்தின் பொலிவைப் பாதுகாப்பதில் உடலில் இயற்கையாக சுரக்கும் எண்ணெய்ப்பசை முக்கிய பங்காற்றுகிறது. இதன் ரசாயனத் தன்மையோடு பொருந்தக்கூடியது ஆலிவ் எண்ணெய். இதைத் தொடர்ந்து பயன்படுத்துவதால் சருமத்தின் பளபளப்பு அதிகரிக்கும். பிளாக்ஹெட்ஸ், ஒயிட்ஹெட்ஸ் போன்ற சருமப் பிரச்சினைகள் நீங்கும்.

ஆன்டி-ஆக்சிடண்டுகள்:

ஆலிவ் எண்ணெயில் ஒலிக் அமிலம் மற்றும் ஸ்குவாலீன் போன்ற ஆன்டி-ஆக்சிடண்டுகள் உள்ளன. இவை சருமம் விரைவாக முதிர்ச்சி அடைவதைத் தடுக்கின்றன.

மாய்ஸ்சுரைசர்:

ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் கொழுப்பு அமிலங்கள் இயற்கையான மாய்ஸ்சுரைசராக செயல்படுகிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சித் தன்மையைப் பராமரிக்கும். சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பளபளப்பாகவும் மாற்றும். சருமம் வறண்டுபோகாமல் தடுக்கும்.

சரும பிரச்சினைகளை நீக்குதல்:

ஆலிவ் எண்ணெய் பிளாக்ஹெட்ஸ் மற்றும் ஒயிட்ஹெட்ஸ் போன்ற சரும பிரச்சினைகளுக்கு இயற்கையான மருந்தாகும். இதை முகத்தில் பூசி மென்மையாக மசாஜ் செய்வதன் மூலம், சருமத்துளைகள் திறந்து, மேற்கண்ட பிரச்சினைகள் எளிதில் நீங்கும். வடுக்கள் மற்றும் முகப் பருக்களால் ஏற்படும் அடையாளங்கள் மறையும். சருமம், மாசு மருவின்றி பளபளப்பாகக் காட்சி தரும்.

ஆலிவ் எண்ணெய்யில் இருக்கும் வைட்டமின் ஈ, பிளேவனாய்டுகள் மற்றும் பாலிபீனால்கள் சரும செல்களின் வளர்ச்சியை மேம்படுத்துகிறது. பாக்டீரியாக்கள், பூஞ்சைகள் மற்றும் வைரஸ்கள் போன்ற கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு தோல் பிரச்சினைகளை குணமாக்குகிறது.

அழற்சியைக் குறைத்தல்:

ஆலிவ் எண்ணெய்யின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடலின் வெளிப்புற மற்றும் உட்புற அழற்சிகளுக்குச் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. அழகு சிகிச்சைக்காக ‘எக்ஸ்ட்ரா வெர்ஜின்’ ஆலிவ் எண்ணெய் எனும் சுத்திகரிக்கப்படாத எண்ணெய் பயன்படுத்துவதே நல்லது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!