பலாத்கார வழக்கில் ஆஸ்கார் விருது பெற்ற இயக்குனர் கைது!

கனடா நாட்டை சேர்ந்தவர் பால் ஹக்கீஸ் (வயது 69). கடந்த 2006-ம் ஆண்டு கிராஷ் என்ற படத்தில் சிறந்த திரைக்கதை எழுதியதற்காக ஆஸ்கார் விருது பெற்றவர். இவர் கடந்த செவ்வாய்கிழமை இத்தாலியில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்க சென்றார். அங்கு சுற்றுலா நகரமான புக்லியாவுக்கு அருகில் உள்ள ஒஸ்துனியாவில் நடந்த விழாவில் பங்கேற்றார்.

இதற்காக அங்குள்ள ஓட்டலில் தங்கி இருந்தார். அப்போது இளம்பெண் ஒருவரை பால் ஹக்கீஸ் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. வெளிநாட்டை சேர்ந்த அந்த பெண்ணை அவரது விருப்பத்துக்கு மாறாக பால் ஹக்கீஸ் உறவு கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவத்தால் அந்த பெண்ணின் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த சம்பவம் குறித்து இத்தாலிய போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் வெளிநாட்டு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக டைரக்டர் பால் ஹக்கீசை நேற்று இத்தாலிய போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

அவரிடம் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த தகவல்கள் இத்தாலிய ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி பால் ஹக்கீசின் வக்கீல்கள் கூறும்போது, இந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை. விசாரணை முடிந்த பின்பு பால் ஹக்கீஸ் குற்றமற்றவர் என்பது நிரூபணமாகும் என்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!