ரூ.1 கோடி பேரம்.. புகார் கொடுத்த நடிகை பரபரப்பு குற்றச்சாட்டு!

நடிகரும் தயாரிப்பாளருமான விஜய் பாபு, பாலியல் தொந்தரவு கொடுத்ததாக நடிகை ஒருவர் போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்த நிலையில் விஜய்பாபு தலைமறைவானார்.

மேலும் நடிகை தன்னை பிளாக்மெயில் செய்வதற்காக பாலியல் புகார் கொடுத்திருப்பதாக அவர் கூறினார். ஜாமீன் கேட்டு விஜய்பாபு விண்ணப்பித்தபோது, விசாரணைக்கு ஆஜராகும்படி கோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து துபாயில் இருந்து கேரளா திரும்பிய விஜய்பாபு, போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார்.

அப்போது பல்வேறு தகவல்களை அவர் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். இந்தநிலையில் வழக்கை வாபஸ் பெறும்படி விஜய்பாபு தனது நண்பர்கள் மூலம் பேரம் பேசியதாக பாலியல் புகார் கூறிய நடிகை பரபரப்பு குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

விஜய்பாபு தனது தொடர்புகளைப் பயன்படுத்தி சாட்சிகளிடம் கணிசமான தொகையை வழங்குவதன் மூலம் செல்வாக்கு செலுத்தி உள்ளார். தன் மீதான புகாரை வாபஸ் பெற்றால் ரூ.1 கோடி தருவதாக நண்பர் மூலம் என்னிடம் விஜய் பாபு உறுதியளித்தார். இது பற்றி நான் போலீசாரிடம் தெரிவித்து உள்ளேன். எனது குடும்பத்தாருக்குத் தெரிவிக்காமல் அச்சம் மற்றும் சட்டத் தடைகளைக் கடந்து போலீசில் புகார் அளித்தேன்.

அவர் எனக்குச் செய்த காரியங்களுக்காக அவரை நீதியின் முன் நிறுத்தத் தயாராக இருந்தேன். விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதைத் தெளிவாக அறிந்து புகார் அளித்தேன். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை.
விஜய்பாபுவிடம் இருந்து விலக்கிக் கொள்ள முயன்ற போதும், அவர் தொடர்ந்து மிரட்டி துஷ்பிரயோகம் செய்தார்.

புகார் அளிக்க வேண்டாம் என்று என் முன் கெஞ்சினார். எந்த விதமான சமரசத்திற்கும் தயாராக இருப்பதாக அவர் கூறினார். எனது புகார் உண்மையாக இல்லாவிட்டால், அவரது வாய்ப்பை நான் ஒப்புக்கொள்வது நல்லது அல்லவா? நான் பிளாக்மெயில் செய்வதாக அவர் கூறுவதில் உண்மை இல்லை. எங்களுக்கிடையில் எந்தவிதமான பணப் பரிமாற்றமும் இல்லை. நீதியைப் பெறுவதற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!