பாழடைந்த வீட்டில் பிணமாக கிடந்த வாலிபர்..!

பணகுடியில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வாலிபர்

நெல்லை மாவட்டம் பணகுடி மங்கம்மாள் சாலை பகுதியைச் சேர்ந்தவர் ராமன். இவருடைய மகன் பசுபதி (வயது 23), வேன் டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருந்தார். அப்போது, அவர் மது அருந்தி இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணகுடியில் உள்ள ஒரு கோவில் பின்புறம் உள்ள பாழடைந்த வீட்டில் பசுபதி உடலில் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்தார்.

அடித்துக் கொலை

நேற்று காலையில் இதை பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக பணகுடி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பசுபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், வேலை முடித்து பசுபதி வந்தபோது, அந்த பகுதியில் மர்ம நபர்கள் கஞ்சா போதையில் வந்தனர். அப்போது, அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் பசுபதியை மர்ம நபர்கள் அடித்துக் கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்தது. எனினும் மர்ம நபர்கள் பிடிபட்ட பின்னரே கொலைக்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

வலைவீச்சு

இந்த கொலை தொடர்பாக பணகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி தலைமையிலான தனிப்படையினர் மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பணகுடியில் வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!