பிளஸ்-1 மாணவியை 14 முறை கத்தியால் குத்திய வாலிபர் ரெயில் முன் பாய்ந்து சாவு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை ஆதிக்குளம் பகுதியை சேர்ந்த 16 வயது மாணவி பிளஸ்-1 படித்து வருகிறார். அவர் நேற்று பிளஸ்-1 தேர்வு எழுதிவிட்டு தனது உறவினர் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அப்போது, அந்த மாணவி திருச்சி சாலையில் உள்ள ரெயில்வே மாம்பாலத்தின் அருகே சென்றுகொண்டிருந்தபோது அவங்கு வந்த வாலிபர் ஒருவர் மாணவியிடம் தன்னை காதலிக்குமாறு வலியுறுத்தியுள்ளார். ஆனால், மாணவி காதலை ஏற்க மறுத்துள்ளார். இதனால், அந்த வாலிபர் மாணவியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் அந்த வாலிபார் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவியை சரமாரியாக குத்தினார். கத்தியால் கழுத்து உள்பட பல இடங்களில் அந்த நபர் மாணவியை 14 முறை கொடூரமாக குத்தியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த மாணவி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்து விழுந்துளார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதனால், மாணவியை கத்தியால் குத்திய அந்த வாலிபர் அங்இருந்து தப்பியோடிவிட்டார்.

கத்திக்குத்து தாக்குதலால் படுகாயமடைந்த மாணவியை மீட்ட அக்கம்பக்கத்தினர் மணப்பாறையில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மாணவி உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர். விசாரணையில் மாணவியை கத்தியால் குத்தியது பொத்தமேட்டுப்பட்டி கிழக்குத்தெருவை சேர்ந்த கேசவன் (வயது 22) என்பது தெரியவந்தது.

விசாரணையில் கேசவன் கடந்த ஆண்டு இதே சிறுமியை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்ட கேசவன் கடந்த சில நாட்களுக்கு முன் சிறையில் இருந்து ஜாமீனில் விடுதலையாகியுள்ளார். சிறையில் இருந்து வெளியே வந்த பின்னர் நேற்று மீண்டும் அதே மாணவியிடம் தன்னை காதலிக்கும்படி மீண்டும் வற்புறுத்தியுள்ளார்.

இதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சரமாரியாக மாணவியை குத்திவிட்டு கேசவன் அங்கிருந்து தப்பியோடிவிட்டான். இதனை தொடர்ந்து தப்பியோடிய கேசவனை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், கீழே பூசரிப்பட்டி ரெயில்வே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்துகிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அங்கு பிணமாக கிடந்தது பள்ளிமாணவியை கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற கேசவன் என்பது தெரியவந்தது. காதலை ஏற்க மறுத்ததால் பள்ளி மாணவியை கத்தியால் குத்திவிட்டு கேசவன் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனை தொடர்ந்து கேசவனின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!