நாளை மறுநாள் திருமணம்… என்.எல்.சி. தொழிலாளிக்கு நடந்த பரிதாபம்!

விருத்தாசலம் அருகே நாளை மறுநாள் திருமணம் நடக்க இருந்த நிலையில் பஸ் மோதி என்.எல்.சி. தொழிலாளி உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த புதுக்கூரைப்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வீரமுத்து. இவருடைய மகன் வீரமணி (வயது 24).

இவர் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கும், சிதம்பரம் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் நாளைமறுநாள்(வியாழக்கிழமை) திருமணம் நடைபெற இருந்தது.

இதையொட்டி இருவீட்டாரும் திருமண ஏற்பாட்டில் மும்முரமாக ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் திருமணத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வீரமணி நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் விருத்தாசலத்திற்கு சென்றார். பின்னர் அங்கிருந்து வீடு நோக்கி புறப்பட்டார்.

புதுக்கூரைப்பேட்டை தனியார் நர்சரி கார்டன் அருகே வந்தபோது, கடலூரில் இருந்து விருத்தாசலம் நோக்கி சென்ற தனியார் பஸ், வீரமணி ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு வீரமணியை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின்பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நாளை மறுநாள் திருமணம் நடைபெற இருந்த நிலையில் என்.எல்.சி. தொழிலாளி இறந்த சம்பவம் அந்த கிராம மக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!