உறவு வேண்டாம் என மனைவி கூறினால்… ஆண், பெண் பதில் என்ன?

கணவர் என்பவர் தனது மனைவியை தனக்கு சொந்தமானவர் என்று பார்க்கிறார். கணவர் என்பவர் மனைவிகளை அடக்கி ஆள்பவர்களாக பழங்கால மரபுகளும், கலாச்சாரமும் பார்க்கிறது


கர்நாடகாவில் பெங்களூருவை சேர்ந்த ஒரு பெண் தனது கணவர் மீது பெங்களூரு போலீசாரிடம் ஒரு பரபரப்பு புகாரை அளித்தார். அந்த புகாரில் திருமணம் ஆன நாள் முதல் தனது கணவர் பாலியல் தொல்லை கொடுப்பதாகவும், நான் கர்ப்பமாக இருந்த போது என்னுடன் உடலுறவு கொண்டதால் கருக்கலைந்தது என்றும், எனது மகளின் முன்பு உடலுறவு கொள்ள என்னை வற்புறுத்துகிறார் என்றும் கூறி இருந்தார்.

இந்த புகாரின்பேரில் பெண்ணின் கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த நிலையில் தன் மீது பதிவான வழக்கை ரத்து செய்ய போலீசாருக்கு உத்தரவிட கோரி அந்த பெண்ணின் கணவர் கர்நாடக ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி நாகபிரசன்னா கூறுகையில், அரசியலமைப்பின் கீழ் அனைத்து மனிதர்களையும் சமமாக கருத வேண்டும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, மற்ற பாலினத்தவர்களாக இருந்தாலும் சரி. மனைவியின் விருப்பம் இல்லாமல் அவரை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டாலும் அது கற்பழிப்பு தான்.

இவ்வாறு செய்வதன் மூலம் அந்த பெண்ணின் மனமும், உடலும் கடுமையாக பாதிக்கப்படும். பெண்ணிடம் கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு கொள்வதை ஏற்க முடியாது. ஒரு ஆண், ஆண் தான். ஒரு செயல் செயல்தான், பலாத்காரம் அது பலாத்காரம் தான். திருமணம் செய்து கொண்டோம் என்பதற்காக கணவருக்கு சிறப்பு சலுகைகள் தர முடியாது. கணவர் என்பவர் தனது மனைவியை தனக்கு சொந்தமானவர் என்று பார்க்கிறார். கணவர் என்பவர் மனைவிகளை அடக்கி ஆள்பவர்களாக பழங்கால மரபுகளும், கலாச்சாரமும் பார்க்கிறது என நீதிபதி கூறினார்.

தொடர்ந்து, அந்த கணவருக்கு எதிரான பாலியல் வன்கொடுமை புகாரை தள்ளுபடி செய்யவும் கர்நாடக ஐகோர்ட்டு மறுத்து விட்டது.

இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 375ல் உள்ள விதிவிலக்கின் கீழ், தற்போதுள்ள இந்திய சட்டத்தின்படி, மனைவி 15 வயதுக்கு உட்பட்டவராக இல்லாதபோது, தனது சொந்த மனைவியுடன் மேற்கொள்ளும் தாம்பத்ய உறவு பாலியல் வன்கொடுமை ஆகாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், இதற்கு எதிராக என்.ஜி.ஓ.க்கள் மற்றும் அனைத்திந்திய ஜனநாயக மகளிர் கூட்டமைப்பு சார்பில் பல மனுக்கள் டெல்லி ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.

இந்த விவகாரத்தில் ஒரு தெளிவான நிலைப்பாட்டை விளக்கும்படி மத்திய அரசிடம் டெல்லி ஐகோர்ட்டு கேட்டு கொண்டுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் நிலைப்பாட்டை தெளிவாக்க அரசு காலஅவகாசம் கேட்டுள்ளது.

உயரதிகாரிகள் அல்லது உறுப்பினர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளாமல் பதிலளிப்பது ஒரு பிரிவினருக்கு அல்லது மற்றொருவருக்கு அநீதி வழங்கியது போல் ஆகிவிடும் என தெரிவித்து உள்ளது.

இந்தியாவில், இதுபோன்ற விவாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க தேசிய குடும்ப சுகாதார அமைப்பு சர்வே (ஆய்வு) ஒன்று எடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த ஆய்வில் 15 முதல் 49 வயதுக்கு உட்பட்ட ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.

அதில், பெருமளவிலான ஆண்கள் கூறும்போது, ஒரு பெண் தாம்பத்யம் வேண்டாம் என அவரது கணவரிடம் மறுக்கிறார் என்றால் அதற்கு அன்றைய தினம் அவருக்கு அதிகப்படியான களைப்பு ஏற்பட்டிருக்கும் என தங்களுடைய நம்பிக்கையை தெரிவித்தனர்.

இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 80 சதவீத பெண்கள் 3 அல்லது அவற்றுள் ஏதேனும் ஒரு காரணத்தினால் தாம்பத்தியத்திற்கு மனைவி மறுப்பு தெரிவிக்க கூடும் என கூறுகின்றனர்.

அந்த 3 விசயங்கள், கணவருக்கு ஒரு வேளை பாலியல் நோய் இருக்கலாம். மற்ற பெண்களுடன் பாலியல் உறவு வைத்திருக்கலாம். அல்லது அந்த பெண் களைப்புடனோ அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபடுவதற்கான மனநிலை இல்லாதவராகவோ இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை 66 சதவீத ஆண்களும் ஏற்று கொண்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்க விசயம். எனினும், 8 சதவீத பெண்கள் மற்றும் 10 சதவீத ஆண்கள் இந்த 3 காரணங்களால் மனைவி தாம்பத்தியத்திற்கு மறுக்கிறார் என்பதனை ஒத்து கொள்ளவில்லை.

கடந்த 2019 முதல் 2021 வரையிலான காலகட்டத்தினை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன் எடுக்கப்பட்ட 2015 முதல் 2016 வரையிலான காலகட்ட ஆய்வுடன், இந்த ஆய்வை ஒப்பிடும்போது, மேற்கூறிய 3 காரணங்களால் மனைவி தாம்பத்தியத்திற்கு மறுப்பு தெரிவிக்கிறார் என்பதற்கான அளவீடு பெண்களிடம் 12 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. எனினும், பழைய ஆய்வுடன் ஒப்பிடும்போது, 3 சதவீத ஆண்களே இந்த அளவீட்டில் அதிகரித்து உள்ளனர்.

இந்த ஆய்வில் மற்றொரு தகவலாக, வெவ்வேறு சூழ்நிலைகளில் தனது மனைவியை கணவர் அடிப்பதற்கு நியாயம் உள்ளது என 44 சதவீத ஆண்களும், 45 சதவீத பெண்களும் நம்புகின்றனர் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

திருமணத்திற்கு பின்னர் கணவரால் பாலியல் வன்கொடுமை என்ற சர்ச்சையான விவகாரத்திற்கு உரிய தீர்வு எட்டப்படுவதற்கு முன்பு இதுபோன்ற சர்வே முடிவு வெளிவந்துள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!