பிரபல ‘டிவி’ நடிகை சித்ரா வழக்கில் கணவரிடம் மீண்டும் விசாரணை!

‘டிவி’ நடிகை சித்ரா தற்கொலை தொடர்பாக, அவரது கணவர் ஹேம்நாத்திடம் மீண்டும் விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை பூந்தமல்லி அருகே, நசரத்பேட்டை நட்சத்திர ஓட்டலில், ‘டிவி’ நடிகை சித்ரா, 29, கணவர் ஹேம்நாத்துடன், 31 தங்கி இருந்தார். அங்கு, 2020 டிச.,9ல், தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு, கணவர் ஹேம்நாத்தான் காரணம் என, சித்ராவின் பெற்றோர் புகார் அளித்தனர். இதையடுத்து, ஹேம்நாத் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இவர், 2021 மார்ச் 3ல், ஜாமினில் வெளியே வந்தார்.

சமீபத்தில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.அதில், ‘என் மனைவியின் தற்கொலையின் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளனர்; இவர்களிடம் ஒரு கும்பல் பணம் பறிக்க முயற்சி செய்கிறது. அதற்கு நான் உடன்படாததால், என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது’ என, கூறியுள்ளார்.

இதனிடையே, ‘சித்ரா தற்கொலைக்கு ஹேம்நாத் தான் காரணம். பின்னணியில் அரசியல்வாதிகள் இருக்கின்றனர் என போலீசார்தான் விசாரிக்க வேண்டும். வழக்கை திசை திருப்ப ஹேம்நாத் நாடகம் ஆடுகிறார்’ என, சித்ராவின் பெற்றோர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், ஹேம்நாத் தெரிவிப்பது போல, சித்ரா தற்கொலைக்கு துாண்டிய அரசியல்வாதிகள் யார் என்றும், அதற்கான ஆதாரங்களை திரட்ட வேண்டிய நிலையில் போலீசார் உள்ளனர்.இதனால், புகார்தாரரான ஹேம்நாத்திடம் மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். தேவை ஏற்பட்டால், சித்ராவின் பெற்றோரிடமும் விசாரிப்போம் என, போலீசார் தெரிவித்தனர்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!