17 வயது சிறுமியை திருமணம் செய்த கேரள வாலிபர்!

பெருந்துறை அருகே சிறுமியை திருமணம் செய்த கேரள வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

பெருந்துறையை அடுத்துள்ள கம்புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் பக்கத்து ஊரில் நடந்த கோவில் திருவிழாவுக்கு சென்றார். அப்போது அங்கு கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரியைச் சேர்ந்த மணிகண்டன் மகன் அஜய் (வயது 25) என்பவர் குழுவாக செண்டை மேளம் அடித்து கொண்டிருந்தார். அதை பார்த்து கொண்டிருந்த சிறுமியிடம் அஜய் பேச்சுக்கொடுத்துள்ளார். பின்னர் சிறுமியுடன் செல்போனில் பேசி பழகியுள்ளார். அதைத்தொடர்ந்து அவரும், அஜயும் காதலித்து வந்துள்ளனர்.


சம்பவத்தன்று வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். விசாரணையில், அஜய் சிறுமியை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று தாலி கட்டி திருமணம் செய்தது தெரியவந்தது. இந்த நிலையில் சிறுமியும், அஜயும் நேற்று விஜயமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே நிற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து போலீசார் அங்கு சென்று அஜயிடம் இருந்து சிறுமியை மீட்டனர்.


மேலும் அஜயை கைது செய்தனர். பின்னர் அவர் ஈரோடு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாட்கள் காவலில் பெருந்துறை சிறையில் அடைக்கப்பட்டார். சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!