நள்ளிரவில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் சாவு!

சென்னை தலைமைச்செயலக காலனி போலீஸ் நிலையத்தில் போலீஸ் விசாரணைக்கு அழைத்து சென்ற வாலிபர் உயிரிழந்தார்.

சென்னை தலைமைச்செயலக காலனி போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு கெல்லீஸ் சிக்னல் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வேகமாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அதில் பயணித்த 2 பேரிடம் 500 கிராம் கஞ்சா மற்றும் ஒரு அரிவாள் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர். அதில், திருவல்லிக்கேணியை சேர்ந்த ரமேஷ் என்ற சுரேஷ் (வயது 28), பட்டினம்பாக்கத்தில் வசித்து வந்த விக்னேஷ் (25) என்பதும் தெரியவந்தது.

ராஜமங்கலம், கண்ணகி நகர், மெரினா, துரைப்பாக்கம் போலீஸ் நிலையங்களில் ரமேஷ் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. அதேபோல் மெரினா, பட்டினம்பாக்கம் போலீஸ் நிலையங்களில் விக்னேஷ் மீது வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

இந்த நிலையில், விசாரணைக்காக தலைமைச்செயலக போலீஸ் நிலையத்தில் இருந்த விக்னேஷுக்கு நேற்று காலை வலிப்பு ஏற்பட்டுள்ளது. அவரை போலீசார் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் விக்னேஷ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவலறிந்த மேற்கு மண்டல இணை கமிஷனர் பிரபாகரன், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் விக்னேஷ் இறப்பு குறித்து விரிவான அறிக்கை சமர்ப்பிக்க மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று (புதன்கிழமை) மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!