திருமணமான 3-வது நாளில் தூக்கில் தொங்கிய புதுப்பெண்!

திருமணமான 3-வது நாளில் புதுப்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.

ஆவடி கோவர்த்தனகிரி அன்பு நகர் முதல் தெருவை சேர்ந்தவர் உதயா (வயது 24). எம்.பி.ஏ. பட்டதாரி. இவர் பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பூந்தமல்லி குமரன் நகரில் வசித்து வந்தவர் அனிதா (26). பி.ஏ. பட்டதாரி. இவர்கள் இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஏற்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் அனிதாவுக்கு அவரது பெற்றோர்கள் திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனால் உதயா மற்றும் அனிதா கடந்த 6-ந் தேதி சென்னை ராயபுரத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர் ஆவடியில் உள்ள உதயாவின் வீட்டில் மேல் தளத்தில் இருவரும் தனியாக குடிசை வீட்டில் குடும்பம் நடத்தி வந்தனர்.

தற்கொலை

இதற்கிடையே அனிதாவின் பெற்றோர் அவரை தங்களது வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளனர். இதற்கு உதயாவின் வீட்டார் மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இந்த நிலையில் அனிதா குடிசை வீட்டுக் கூரையில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டார். அவரை மீட்டு ஆவடியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த ஆவடி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆவடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 3 நாட்களே ஆவதால் திருவள்ளூர் ஆர்.டி.ஓ. விசாரணை நடக்கிறது.News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!