கோடையில் உடலின் வெப்பம் அதிகரிக்காமல் தப்பிப்பது எப்படி?

கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.


சூரியனிலிருந்து வெளிப்படும் வெப்பம் அதிகரிக்க அதிகரிக்க, நம் உடலின் வெப்பமும் அதிகரிக்கும். அதேவேளையில் நம் உணவு முறையிலும் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களைச் செய்துகொண்டால் வெப்ப நோய்களை வெல்வது எளிது என்கின்றனர் டாக்டர்கள்.

வெயில் காலத்தில் தினமும் மூன்றிலிருந்து 3 லிட்டர்வரை தண்ணீர் குடிப்பது அவசியம். இளநீர், மோர், சர்பத், பானகம், பதநீர் முதலியவற்றை அதிகமாகக் குடிக்கலாம். இளநீரில் உள்ள பொட்டாசியம், சோடியம், கால்சியம், மக்னீசியம் முதலிய தாதுக்கள் உடலின் வெப்பத்தை உள்வாங்கி, சுற்றுச்சூழல் வெப்பநிலைக்கு ஏற்றபடி உடலின் வெப்பத்தைக் குறைக்கின்றன.

தர்ப்பூசணி, வெள்ளரி, கொய்யா, பப்பாளி, சாத்துக்குடி ஆரஞ்சு, திராட்சை, பலா பழம், அன்னாசி, கிர்ணி, நுங்கு போன்ற நீர்ச்சத்து நிறைந்த பழங்களையோ, பழச்சாறுகளையோ அடிக்கடி உட்கொள்ளுங்கள். இவற்றில் பொட்டாசியம் தாது அதிகமுள்ளது. கோடை வெப்பத்தால் வியர்வையில் பொட்டாசியம் வெளியேறிவிடும்.

இதனால் உடல் களைப்படைந்து, தசைகள் இழுத்துக்கொள்ளும். அப்போது, இப்பழங்களில் உள்ள பொட்டாசியம் அந்த இழப்பை ஈடுகட்டும். கோடையில் வெப்பத் தளர்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க பழங்களைச் சாப்பிடுவதுதான் சிறந்த வழி.

கோடையில் எண்ணெயில் பொரிக்கப்பட்ட, வறுக்கப்பட்ட, கொழுப்பு அதிகமுள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை அதிகமுள்ள இனிப்பு பலகாரங்கள், கிரீம் மிகுந்த பேக்கரி பண்டங்கள், பர்கர், பீட்சா, ஐஸ்கிரீம் போன்ற சிற்றுண்டிகள் தண்ணீர் தாகத்தை அதிகப்படுத்தும் என்பதால், இவற்றைத் தவிர்ப்பதே நல்லது. அதேபோல் சூடான, காரமான, மசாலா கலந்த உணவு வகைகளையும் குறைத்துக்கொள்ள வேண்டும்.

இட்லி, இடியாப்பம், தயிர் சாதம், மோர் சாதம், கம்பங்கூழ், அகத்திக்கீரை, முருங்கைக் கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை, காரட், பீட்ரூட், பீர்க்கங்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பாகற்காய், புடலை, அவரை, முட்டைக்கோஸ், வாழைத்தண்டு, வெங்காயப் பச்சடி, தக்காளி கூட்டு முதலியவை சிறந்த கோடை உணவு வகைகள்.

மாலை வேளைகளில் வெள்ளரி சாலட், தர்ப்பூசணி, தக்காளி சூப், காய்கறி சூப் போன்றவற்றைச் சாப்பிடலாம். கேப்பைக் கூழில் தயிர்விட்டுச் சாப்பிட்டால், உடலின் வெப்பம் உடனே தணியும். காரணம், கேப்பைக் கூழுக்கும் தயிருக்கும் உடலின் வெப்பத்தை உறிஞ்சக்கூடிய தன்மையுண்டு.

கோடையில் 2 மணி நேரத்துக்கு மேல் தொடர்ந்து வெயிலில் இருப்பதைத் தவிர்க்க வேண்டும். பகல் 12 மணியிலிருந்து மாலை 4 மணிவரை வெளியில் செல்லாமல் இருப்பது நல்லது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!