எனது சாவுக்கு இவங்க தான் காரணம்… கல்லூரி மாணவி விபரீதமுடிவு!

புளியங்குடி அருகே மன்னிப்பு கடிதம் எழுதி கேட்டு பேராசிரியர்கள் திட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடியை அடுத்த சிந்தாமணியை சேர்ந்தவர் மாடத்தி. இவரது மகள் இந்து பிரியா(வயது 18).

இவர் புளியங்குடி அருகே உள்ள டி.என்.புதுக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில் இன்று காலை அவரது தாயார் வழக்கம்போல் கல்லூரிக்கு செல்வதற்கு நேரம் ஆகிவிட்டது என்று கூறி தனது மகளை எழுப்புவதற்கு சென்றுள்ளார்.

அங்கு இந்துபிரியா தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். இதனை கண்ட மாடத்தி அலறி துடித்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து இந்துபிரியா உடலை கீழே இறக்கினர்.

தகவல் அறிந்து அங்கு வந்த புளியங்குடி போலீசார் மாணவியின் உடலை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்து பிரியா நேற்று வழக்கம்போல் கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது அவரை அழைத்த பேராசிரியர் ஒருவர், கல்லூரிக்கு அனுமதியின்றி செல்போன் கொண்டுவந்துள்ளாய். எனவே ஒரு மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடு என கேட்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து பிரியா, தான் செல்போன் கொண்டு வரவில்லை என்றும், வேறு மாணவிதான் செல்போன் கொண்டு வந்தார் என்றும் கூறியுள்ளார். ஆனாலும் அந்த பேராசிரியரும், ஒரு பேராசிரியையும் சேர்ந்து அந்த மாணவியை திட்டி, மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது.

இதனால் மாணவி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் விசாரித்து வந்த நிலையில், இந்துபிரியா அறையில் 2 பக்கத்தில் எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் சிக்கியது. அதில், நான் செய்யாத தவறுக்கு என்னிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி விட்டனர். எனவே நான் தற்கொலை செய்கிறேன்…. எனது சாவுக்கு ஒரு பேராசிரியரும், ஒரு பேராசிரியையும் தான் காரணம் என்று எழுதப்பட்டு இருந்தது.

இதையடுத்து போலீசார் அந்த கடிதத்தை கைப்பற்றி, கல்லூரியில் விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!