ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் விபரீதமுடிவு!

ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆற்காடு அடுத்த தென்கழனி பகுதியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. லாரி டிரைவர். இவரது மனைவி பச்சையம்மாள். இவர்களது மகன் விக்னேஷ் (23) சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.

விக்னேஷ் பப்ஜி மற்றும் ஆன்லைன் விளையாட்டில் அதிக ஈடுபாடுடன் விளையாடி வந்தார்.

விக்னேஷ் ஆன்லைன் விளையாட்டில் அதிகமாக பணத்தை செலவு செய்து இருக்கிறார். பணப் பற்றாக்குறையால் தெரிந்தவர்களிடம் கடனாக வாங்கி ஆன்லைன் விளையாட்டில் செலவு செய்துள்ளார். இதனால் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திரும்ப கேட்டுள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்களுக்கு தெரியவரவே ஏன் இப்படி செய்கிறாய் என்று விக்னேசை கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விக்னேஷ் நேற்று இரவு வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இன்று காலையில் பெற்றோர் எழுந்து வந்து விக்னேஷ் அறையை பார்த்தபோது விக்னேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து ராமமூர்த்தி திமிரி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலை மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்ததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!