லாவண்யாவை மதம் மாறும்படி தொடர்ந்து வற்புறுத்தல் – சித்தி பகிரங்க குற்றச்சாட்டு!

மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோரிடம் திருவையாறு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் விசாரணை நடத்தினார்.

தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த லாவண்யா (17) என்ற மாணவி, விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளியில் உள்ள விடுதியில் தங்கி படித்து வந்த லாவண்யாவை, மதம் மாறும்படி கூறி வற்புறுத்தியதாலும், தொடர்ந்து தொந்தரவு கொடுத்ததாலும் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுதொடர்பாக லாவண்யா பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

லாவண்யா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விடுதி வார்டன் சகாயமேரியை (62) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். லாவண்யாவின் மரணத்துக்கு நீதி வழங்கக் கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். பாஜக மற்றும் இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். லாவண்யாவின் மரணத்திற்கு நீதி கேட்டு, டுவிட்டரில் #JusticeforLavanya என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இந்நிலையில் மாணவி லாவண்யாவின் தந்தை முருகானந்தம், சித்தி சரண்யா ஆகியோரிடம் திருவையாறு துணை காவல் கண்காணிப்பாளர் ராஜ்மோகன் விசாரணை நடத்தினார்.

பின்னர் லாவண்யாவின் சித்தி சரண்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

மதமாற்றம் செய்யக்கோரி 2 ஆண்டுகளாக லாவண்யாவை வற்புறுத்தி வந்தனர். விடுதி கழிவறையை சுத்தம் செய்ய சொல்லியும்
பாத்திரம் கழுவச் சொல்லியும் தொந்தரவு செய்துள்ளனர். தொடர்ந்து மதம் மாறும்படி வற்புறுத்தியதால் லாவண்யா தற்கொலை செய்திருக்கிறாள். மதம் மாறச்சொல்லி வற்புறுத்திய 2 பேரை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம். எங்கள் பெண்ணுக்கு நடந்த கொடுமை வேறு யாருக்கும் நடக்கக் கூடாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!