மாதவிலக்குக்கு முன் வரும் மன அழுத்தம் பற்றி தெரியுமா..?

மாதவிடாய் தொடங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பல பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மாற்றங்களை உணர்கிறார்கள்.


பெண்களுக்கு உடல் ரீதியாக, ஹார்மோன்களின் தாக்கம் அதிகம். பூப்படையும் சமயம் தொடங்கி, மாதவிடாய் நிற்கும் சமயம் வரை ஒரு முப்பது நாற்பது வருடங்கள் பெண்கள் பல உடல் ரீதியான மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள்.

தோராயமாக எழுபது சதவீத பெண்களுக்கு பிஎம்எஸ் (PMS) எனப்படும் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் (Pre-Menstrual Syndrome) அவர்களுக்கு ஏற்படுவதாக கூறுகிறார்கள்.

மாதவிலக்கு முடிந்தவுடன் தொடரும் முதல் இரண்டு வாரங்கள் பெண்கள் ஈஸ்ட்ரோஜென் (Oestrogen) எனப்படும் ஹார்மோனின் பாதிப்பில் இருக்கிறார்கள்.

இந்த காலக்கட்டத்தில் (phase) பெண்களுக்கு அதிக உற்சாகமும் ஆர்வமும் ஏற்படும். புதிய ஆக்கபூர்வமான சிந்தனைகள் ஏற்படும் . குடும்பத்தில் உறவுநிலைகளை கச்சிதமாக சகிப்புத்தன்மையுடன் அணுகுவார்கள்.

மாதவிடாய் தொடங்குவதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்னர் பல பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மாற்றங்களை உணர்கிறார்கள். வயிறு உப்புவது, மார்பகங்கள் கனத்து போவது போன்ற உணர்வு , அஜீரண கோளாறுகள், உயிர் உறுப்புகளில் வலி, உடல் அசதி, தலை வலி போன்ற உபாதைகள் ஏற்படும்.

மனதளவிலும் பெண்கள் பல உளைச்சல்களை உணர்வதுண்டு. யாரைப் பார்த்தாலும் எரிந்து விழுவது , காரணமில்லாமல் அழுகை, வேலையிடங்களில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத வாக்குவாதங்களில் ஈடுபடுவது, தனிமையாக உணர்வது, பதற்றம் மற்றும் மன அழுத்தம் போன்றவை பிஎம்எஸ்-இன் (‘PMS’) அறிகுறிகளே !

பசியின்மை, தூக்கமின்மை, நமக்கு பிடித்த விஷயங்களைக் கூட செய்வதற்கு ஆர்வமில்லாமல் இருப்பது போன்ற அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டதுண்டா ?

பிஎம்எஸ் அறிகுறிகள் மாதவிடாய் தொடங்குவதற்கு முன் தொடங்கி, ரத்தப்போக்கு தொடங்கியபின் படிப்படியாக குறையும். எல்லா அறிகுறிகளும் எல்லா பெண்களுக்கும் ஏற்படுவது இல்லை.

வயதாக வயதாக இதன் தன்மையும் மாறுபடும். உணவுப்பழக்கங்களும் வாழ்க்கைமுறையும் இதனுடன் நெருங்கிய தொடர்புடையவை.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!